ADDED : ஜூலை 14, 2011 12:57 AM
ராமநாதபுரம் : தமிழகத்தில் அரசு கேபிள் 'டிவி' திட்டம் துவங்குவதன் மூலம் கட்டணத்தை சீரமைக்க முடியும் என்ற நிலையில், தற்போது திட்டத்தை எம்.எஸ்.ஓ.க்கள்(மல்டி சப்ளை ஆபரேட்டர்) மூலம் முடக்குவதற்கான நிலை ஏற்பட்டுள்ளதாக, கேபிள் ஆபரேட்டர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
தமிழகத்தில் அரசே, கேபிள் 'டிவி' நடத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான முதற்கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதற்காக, மாவட்டம்தோறும் கேபிள் ஆபரேட்டர்களை உளவுப் பிரிவு போலீசார் சந்தித்து, அரசு கேபிள் 'டிவி' நடத்துவதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து தகவல் சேகரித்தனர்.
இதில், பெரும்பாலான கேபிள் ஆபரேட்டர்கள் சன் குழுமத்தின் ஆதிக்கத்தில் சிக்கியுள்ளதால், தகவல் சொல்லவே அச்சப்பட்டனர். இதற்கான காரணங்கள் குறித்து, ரகசியமாக விசாரணை நடந்தது. அதில், இலவச சேனல்களுடன் கட்டண சேனல்களை, சலுகைக் கட்டணத்தில் அரசு பெற்று, மாவட்டம் வாரியாக குறைந்த கட்டணத்தில் வினியோகிக்கும் போது, பெரும்பாலான மாவட்டங்களில் எம்.எஸ்.ஓ.,வாக செயல்படும் சன் குழுமத்தினர், போட்டிக்கு அரசு கட்டணத்தைவிட குறைவாக கொடுக்க வாய்ப்பு உள்ளது.
இதன் மூலம், உள்ளூர் ஆபரேட்டர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எண்ணத்தில் இருப்பதாக தெரிவித்தனர். இதனால், யாரிடம் இணைப்பை பெறுவது என்ற குழப்பம் மக்களுக்கு ஏற்படும். எனவே, இதற்கு சட்ட ரீதியாக செயல்பட வேண்டும். தனிநபர் 'எம்.எஸ்.ஓ.,'வாக இருக்கக் கூடாது என்ற முடிவு எடுத்தால், ஆபரேட்டர்களும் பாதிக்கமாட்டார்கள்; பொது மக்களுக்கும் குழப்பமின்றி குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் 'டிவி' இணைப்பைக் கொடுக்க முடியும் என உளவுப் பிரிவு, அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

