UPDATED : ஜூன் 24, 2026 06:34 PM
ADDED : ஜூன் 24, 2026 05:25 PM

சென்னை: பாமகவில் நிறுவனர் ராமதாஸ்- அன்புமணி இடையே நீடித்து வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. தைலாபுரம் தோட்டத்தில் தன்னை சந்தித்த அன்புமணியை, ராமதாஸ் கண்ணீருடன் ஆரத்தழுவி வரவேற்றார்.
கடந்த சில ஆண்டுகளாக பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் நீடித்து வந்தது. இருவரும் மாறி மாறி நிர்வாகிகளை நீக்கி வந்தனர். ஒரு கட்டத்தில் அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார். பல பேட்டிகளில் அன்புமணியை விமர்சித்தும் கருத்து தெரிவித்தார். பிறந்த நாளின் போது கூட தனக்கு அவர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.
சட்டசபை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 5 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது.ராமதாஸ், சசிகலா உடன் கூட்டணி அமைத்தார். தந்தை, மகன் இடையிலான மோதல் காரணமாக பாமக தொண்டர்கள் கவலையில் ஆழ்ந்தனர்.இந்நிலையில், அன்புமணி இன்று தைலாபுரம் தோட்டத்திற்கு வந்தார். அவரை , ராமதாஸ் கண்ணீருடன் ஆரத்தழுவி வரவேற்றார்.
ராமதாஸ் - சரஸ்வதி தம்பதியின் 61வது திருமண நாளை முன்னிட்டு அன்புமணி குடும்பத்துடன் வந்து பெற்றோரிடம் ஆசி பெற்றார். இதனால், இருவருக்கும் இடையே நிலவி வந்த மோதல் முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிகிறது. நிருபர்களை சந்தித்த அன்புமணியிடம், கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்துவிட்டதா எனக் கேட்டதற்கு, 'இனி நல்லதே நடக்கும்,' எனக்கூறிவிட்டு சென்றார்.
தினமலர் நேரலை
பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி நேரில் சந்தித்தது தினமலர் இணையதளம் மற்றும் சமூக வலைதளத்தில் நேரலை செய்யப்பட்டது.
