சிறுமி வன்கொடுமை மதுக்கடைகளை மூட அன்புமணி வலியுறுத்தல்
சிறுமி வன்கொடுமை மதுக்கடைகளை மூட அன்புமணி வலியுறுத்தல்
ADDED : நவ 21, 2024 07:44 PM
சென்னை:'சிறுமியை வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு, கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். மதுக்கடைகளை மூட வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
வேலுார் மாவட்டத்தை சேர்ந்த, 13 வயது சிறுமியை, மது போதையில் இருந்த மூன்று பேர், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. சிறுமியை காணாமல் தேடிய அவரது தந்தை, அருகில் உள்ள கல் குவாரியில் குழந்தையின் அழுகுரல் கேட்டு, ஓடிச்சென்று காப்பாற்றி உள்ளார்.
இது குறித்து, அப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில், சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார். அதை வாங்க மறுத்த போலீசார், மற்றொரு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும்படி கூறியுள்ளனர்.
அங்கும் புகார் பெற்றுக் கொள்ளப்படாத நிலையில், சிறுமியின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அதன்பின், போலீஸ் நிலையத்தில் புகார் பெறப்பட்டுள்ளது.
சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்த, புகாரைக்கூட வாங்காமல், அவரது குடும்பத்தினரை, போலீசார் அலைக்கழித்திருப்பது, அதை விட கொடுமை. சிறுமியை வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு, கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். மதுக்கடைகளை உடனே மூட, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.