UPDATED : மார் 13, 2026 07:03 AM
ADDED : மார் 12, 2026 11:56 PM

சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, தமிழகம் உட்பட, 13 மாநிலங்களில் உள்ள, தொழில் அதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான, 581.65 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.
தொழில் அதிபர் அனில் அம்பானி, பல வங்கிகளில், கோடிக்கணக்கான ரூபாய் கடன் வாங்கி, மோசடியில் ஈடுபட்டதாக, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதன் அடிப்படையில், அவர் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் வாயிலான, வங்கி கடன் மோசடி தொடர்பாக, அனில் அம்பானிக்கு சொந்தமான, 15,729 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கி உள்ளனர்.
இந்நிலையில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட, 13 மாநிலங்களில், அனில் அம்பானிக்கு சொந்தமான, 581.65 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நேற்று முடக்கினர்.

