ADDED : மே 12, 2026 03:23 AM
சென்னை: அண்ணா பல்கலையின் கீழ், 11 அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகள், மூன்று அரசு உதவி பெறும் இன்ஜினியரிங் கல்லுாரிகள், 350க்கும் அதிகமான தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன.
ஒவ்வொரு கல்லுாரியும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பேராசிரியர் நியமனம் செய்வது அவசியம்.
அண்ணா பல்கலை மேற்கொண்ட ஆய்வில், தமிழகத்தில் பல்வேறு கல்லுாரிகளில், போலியாக பேராசிரியர் விபரங்கள் கணக்கு காண்பிக்கப்பட்டது கண்டறியப்பட்டது; இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
இந்த சூழலில், அண்ணா பல்கலை இணைப்பு பெறுவதற்கான நடைமுறையில் தீவிர கெடுபிடிகளை, பல்கலை மேற்கொண்டுள்ளது. இணைப்பு அங்கீகாரம் பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
கல்வி திட்டங்களுக்கான இணைப்பு அங்கீகாரத்தை பெற விண்ணப்பிக்கும் கல்வி நிறுவனம், எப்போதெல்லாம் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறதோ, அப்போதெல்லாம் அந்த இணைப்பு, அங்கீகாரத்தின் தன்மை எதுவாக இருப்பினும், 50,000 ரூபாய் ஆய்வு செயலாக்க கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு கூடுதல் கல்வி திட்டத்திற்கும், ஏற்கனவே வசூலிக்கப்பட்ட 40,000 ரூபாய், 50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், அங்கீகாரம் பெறுவதற்கு, மே 14 வரை அவகாசத்தை நீட்டித்தும், அண்ணா பல்கலை உத்தரவிட்டுள்ளது.
