தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தே.ஜ. கூட்டணி தொண்டர்கள் மனசாட்சிப்படி தேர்தலில் பங்கேற்பார்கள்; அண்ணாமலை

தே.ஜ. கூட்டணி தொண்டர்கள் மனசாட்சிப்படி தேர்தலில் பங்கேற்பார்கள்; அண்ணாமலை

தே.ஜ. கூட்டணி தொண்டர்கள் மனசாட்சிப்படி தேர்தலில் பங்கேற்பார்கள்; அண்ணாமலை


UPDATED : ஜன 12, 2025 09:47 PM

ADDED : ஜன 12, 2025 09:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 12, 2025 09:47 PM ADDED : ஜன 12, 2025 09:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கோவையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது;

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு எதற்கு என்பது தெளிவுபடுத்த வேண்டியது எனது கடமை. நக்சல், தீவிரவாத தாக்குதல் நடந்த இடங்களில் கூட தேர்தலில் நாங்கள் பங்கேற்று இருக்கிறோம்.

எங்கேயும் புறக்கணிக்காத பா.ஜ., ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது. தமிழகத்தில் எந்த அளவுக்கு லஞ்ச லாவண்யம், ஓட்டுக்கு பணம் கொடுப்பது என்பது எல்லோரும் அறிவார்கள்.

அதுபோல இந்த முறை தே.ஜ., கூட்டணி நின்றிருந்தால் மக்களை அடைத்து வைத்திருப்பார்கள். எனவே மக்களுக்கு அந்த வலி வேண்டாம் என்று நினைக்கிறோம். தமிழக மக்கள் இதை உணர்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

தே.ஜ., கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளும் முதல்முறையாக தேர்தலை புறக்கணிப்பதை பார்க்கின்றோம். எத்தனை கட்சிகள் இம்முறை தேர்தலை புறக்கணிக்கின்றனர் என்று கேள்வி கேட்பார்கள், அதை பரிசீலிப்பார்கள். இதன் மூலம் மக்களே ஒரு உந்துதல் கொடுப்பார்கள்.

மக்கள் மனசாட்சிப்படி தவறு செய்யக்கூடிய ஒரு கட்சிக்கு சாட்டையடி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையால் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலை புறக்கணிக்கிறது. அதேநேரத்தில் தேர்தல் நடக்கும் போது சாதாரணமான மனிதர்களாக கட்சியில் உள்ள அனைவரும் கண்காணிப்போம். எங்கள் ஜனநாயக கடமையாக கண்காணித்து செய்வோம்.

தமிழகத்தில் அடக்குமுறை, ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது, பட்டியில் அடைப்பது, பணம், கொலுசு கொடுப்பது எல்லாம் 15 நாட்களில் ஒரு தேர்தலையே கேவலப்படுத்துவது போன்று தி,மு.க.,வின் செயல்பாடு தமிழகத்தில் இது கடைசியாக இருக்கும் என்று நம்புகிறோம்.

தேர்தல் நிற்பது தைரியம் என்பது அல்ல. பா.ஜ., தன்னந்தனியாக எல்லா இடத்திலும் நிற்கிறோம். தேர்தலில் நக்சலைட்டுகளால், தீவிரவாதிகளால் எங்கள் தொண்டர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். தமிழக பா.ஜ., கோரிக்கையை தேசிய தலைமை ஏற்று, அங்கிருந்து அனுமதி அளித்துள்ளனர் என்றால் தமிழக மக்கள் மாற்றத்தை கொண்டு வருவார்கள் என்பது அவர்களுக்கும் தெரியும்.தேர்தலில் ஒரு கட்சி நின்றால் தான் ஜனநாயகம் முழுமை பெறும் என்பதை நாங்கள் நம்பவில்லை.

எப்படி தேர்தலை ஆணையம் நடத்தும் என்பது எங்களுக்கு தெரியும். மாநில அதிகாரிகளின் முழுமையான அழுத்தம் இதில் இருக்கும். வெளி மாநில பாதுகாப்பு படையினர், அதிகாரிகள் இங்கு வந்து தேர்தலை கண்காணிப்பது இல்லை என்பது தெரியும்.

கவர்னர் கடுமையான வார்த்தைகளை இன்று பயன்படுத்தி இருக்கிறார். அகங்காரம், இது நல்லதல்ல போன்ற கடுமையான வார்த்தைகளை பயன்படுத்த எதற்காக தள்ளப்பட்டார் என்பதை அனைவரும் உணர வேண்டும். ஒரு மாஜி அமைச்சர், முதல்வர் மட்டும் கண்ணை காட்டி இருந்தால் கவர்னரின் சட்டை, பேண்ட்டை கழற்றி டவுசருடன் நடக்க விட்டு இருப்போம் என்று கூறினார்.

சென்னை முழுக்க கவர்னருக்கு எதிராக சுவரொட்டிகள், ஆபாச கோஷங்களை ஆளும்கட்சியினர் எழுப்புகின்றனர். இதை முதல்வர் கண்டிக்கவில்லை என்றால் அவர் ஊக்குவிக்கின்றார் என்று அர்த்தம்.

1949ல் ஆரம்பிக்கப்பட்ட தி.மு.க., என்கின்றனர்.. ஆனால் அவர்களின் நடவடிக்கை குழந்தைத்தனமாக உள்ளது. எனவே கவர்னர் சொல்லியது சரியே, அதில் எந்த தவறும் இல்லை. கடுமையான வார்த்தைகளை அவர் பயன்படுத்த தி.மு.க.,வே களம் அமைத்து கொடுத்துவிட்டனர். இனியாவது தி.மு.க., தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஈ.வெ.ரா.,வுக்கும் நிகழ்கால தமிழகத்துக்கும் தொடர்பு இல்லை. எப்போதோ கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். 1962ல் முரசொலியானது. பொங்கல் மலரில் ஈ.வெ.ரா., பற்றிய கார்ட்டூன் வெளியிட்டு உள்ளது. இதை நான் படித்தால் ரொம்ப ஆபாசமான, அருவருப்பானதாக போய்விடும்.

ஈ.வெ.ரா., சில சாதிகளை பற்றி, மக்களை பற்றி அதில் என்ன பேசியுள்ளார் என்பதை பாருங்கள். அவர் சொன்ன கருத்து என்ன என்பது எல்லா மக்களுக்கும் தெரியும். இன்று அவர் (ஈ,வெ.ரா) அந்த கருத்தை கூறினார் என்பதற்கு பற்றி பேசுவதால் எந்த லாபமும், நட்டமும் இல்லை.

சீமான் அவரது கருத்தை, அவரது இயக்கத்தின் பாதை என்பதால் அப்படி பேசியிருக்கின்றனர். அவர்கள் கூறிய கருத்து சரிதான். ஆனால் நான் அதை பேச விரும்பவில்லை. அதை கடந்து போக நினைக்கிறோம்.

எங்களின் சிந்தனை மாறவில்லை, அப்படியே தான் உள்ளது. தொல்காப்பியன் பொய்யர். திருவள்ளுவர் ஒரு ஆரிய கைக்கூலி என்று ஈ.வெ.ரா.,கூறி இருக்கிறார்.

2023 ஆக. 17ம் தேதி அதுவரை மாநில அரசின் கையில் அவசியமான கனிமவளம் என்ற அதிகாரம் இருந்தது. அது பின்னர் மத்திய அரசின் அதிகாரத்துக்கு மாறிவிட்டது. டங்ஸ்டன் ஏலம் விட்டால் கூட மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் கூட கிடைக்காது. இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் உண்மையை தவிர பல விஷயங்களை பேசியிருக்கிறார்.

மாநில அரசானது, மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தை ஏன் வெளியிடவில்லை. சுப்ரீம்கோர்ட் நீதிபதி போல சபாநாயகர் அப்பாவு பேசுகிறார். தம்பிதுரை போல உரிமை மீறல் யாராவது கொண்டு வந்தால் அதை நாங்கள் வரவேற்கிறோம்.

உதயநிதிக்கு அண்ணா பல்கலைக்கழகம் தெரியாது. அங்கு நடந்த பாலியல் கொடுமை, எப்.ஐ.ஆர்., கசிந்தது என எதுவுமே கண்ணுக்கு தெரியாது. நீட்டுக்கான ரகசியம் இருக்கும் என்றார். அதையும் மறந்துவிட்டார்.

மன்னராட்சி அரசியலில் தகுதியில்லாத நபர். திராவிட மாடல் ஒரு பேரழிவு மாடலாக மாறும் என்பதற்கு உதயநிதி ஆகச்சிறந்த ஒரு உதாரணம். ஈரோடு கிழக்கில் ஒரு எம்.எல்.ஏ., ஜெயித்து என்ன ஆக போகிறது. இது கானல் நீரை போன்ற ஒரு தேர்தல். யாருக்கும் பயன் இல்லை.

அப்பா, அப்பா என்று கூப்பிடுகிறார்கள் என்று சட்டசபையில் ஸ்டாலின் கூறி உள்ளார். யார் அப்படி கூறுகிறார்கள் என்பது தெரியவில்லை. அவரை அப்பா என்று கூறும் வீடியோ ஒன்றை நான் பார்க்க வேண்டும். இது போன்ற பிதற்றுகின்ற முதல்வரை நாம் பார்க்கிறோம்.

இன்பம் பொங்கும் பொங்கல் என்று முதல்வர் கூறுகிறார். அவரது குடும்பத்தில் இன்பம் பொங்குகிறது. அடுத்து இன்பநிதியை கொண்டு வர உள்ளனர். அவரை அரசியலில் எப்படி கொண்டு வருவது என்று யோசித்து வருகின்றனர். தமிழக மக்களுக்கு எந்த இன்பமும் இல்லை. துன்பம் தான் இருக்கிறது.

மத்திய அரசின் நல்ல திட்டங்களை எல்லாம் தமிழக அரசு பாழ்படுத்தி கொண்டு இருக்கிறது. எனவே இதை திராவிட மாடல் என்பதற்கு பதில் பேரழிவு மாடல் என்று விவசாயிகள் கூறிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நல்ல தரமான வெள்ளிக் கொலுசு வாக்காளர்களுக்கு கொடுங்கள், வேகமாக வந்து வாக்காளர்களுக்கு என்ன பொருள் கொடுக்க முடியுமோ அதை கொடுத்துவிடுங்கள். வாக்காளர்களை பட்டியில் அடைக்கும் போது உதயநிதி படம் போடாமல் வேறு ஒரு நல்ல படத்தை போடுங்கள்.

அரசியலில் சில தலைவர்களுக்கு ரிட்டயர்மென்ட் வேண்டும் என்பதற்கு சரியான உதாரணம் அமைச்சர் துரைமுருகன். அவரின் பேச்சை பார்க்கும் போது ரிட்டயர்மென்ட் வயதை நெருங்கிவிட்டார் என்று நான் பார்க்கிறேன்.தே.ஜ. கூட்டணி தொண்டர்கள் மனசாட்சிப்படி தேர்தலில் பங்கேற்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us