வழக்கு.. வழக்கு என என்னையும் மிரட்டுகிறார் அண்ணாமலை: சொல்கிறார் செல்வப்பெருந்தகை
வழக்கு.. வழக்கு என என்னையும் மிரட்டுகிறார் அண்ணாமலை: சொல்கிறார் செல்வப்பெருந்தகை
ADDED : ஜூலை 11, 2024 05:59 PM

சென்னை: அனைவரையும் மிரட்டுவது போல என்னை வழக்கு வழக்கு என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மிரட்டுவதாக தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட செல்வப்பெருந்தகை, அதில் கூறியிருப்பதாவது: எல்லாரையும் மிரட்டுவதுபோல என்னையும் வழக்கு.. வழக்கு.. என அண்ணாமலை மிரட்டுகிறார். என் வழக்கு தன்மை அவருக்கு தெரியவில்லை.
என்னை குற்றவாளி என சொல்லும் போலீசிடம், என் வழக்கை சிபிஐ விசாரிக்கட்டும் என சொன்னவர்கள் நாங்கள். உயர்நீதிமன்ற உத்தரவை அண்ணாமலை படிக்க வேண்டும். அவர் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது எவ்வளவு பேரை துன்புறுத்தியிருப்பார், எவ்வளவு பேரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருப்பார் என்பது இப்போது புரிகிறது.
விசாரிக்க கோரிக்கை
அதனால் தான் நீண்ட நாட்களாக பணியில் நீடிக்க முடியாமல் ராஜினாமா செய்துவிட்டு வந்திருக்கிறார். இது பற்றி கர்நாடக முதல்வர், துணை முதல்வரிடம் விசாரிக்க கோரியுள்ளேன். நாங்கள் அடிமட்டத்தில் இருந்து மக்களுக்காக பொது வாழ்க்கைக்கு வந்தவர்கள். ஆனால் நீ (அண்ணாமலை) அப்படியில்லை. பல மடங்களை பிடித்து, சாமியார் கால்களில் விழுந்து, எதற்காக வந்திருக்கிறாய் எனத் தெரியும். என் பின்னால் உண்மையான சக்திவாய்ந்த மக்கள் இருக்கின்றனர். உன் பின்னால் வியாபாரிகள் தான் இருக்கின்றனர்.
வெறுப்பு அரசியல்
வாழ்க்கையும், அரசியலும் நிரந்தரமில்லை. ஆனால், உண்மையுடன் மக்கள் சேவை செய்பவனே தலைவன். உன்னை மாதிரி வெறுப்பு அரசியல் செய்பவன் தலைவன் அல்ல. இதுவரை நீ யாரை திட்டவில்லை? யாரை கடிக்கவில்லை? நீ யாரை விட்டு வைத்துள்ளாய்? என் தாய் என்னை பார்த்து பெருமைப்படுவார்; ஆனால் உன்னுடைய தாய் உன்னைப்பற்றி பெருமைக்கொள்ள ஏதேனும் இருக்கிறதா? இறந்தவர்களை கூட குற்றவாளிகள், தண்டனை பெற்றவர்கள் என கூறி வருகிறாய்.
கோழைகள்
ஒருவரை அவமானப்படுத்த வேண்டும், அசிங்கப்படுத்த வேண்டும், சங்கடப்பட வேண்டும் என்பதற்காக குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் அண்ணாமலை. அவர் சொல்லி யாராவது சங்கடப்படுவார்கள் எனில் அவர்கள் கோழைகள். ஒரு சாமானியன் மீது வழக்கு போட்டு அவ்வளவு துன்புறுத்தி, உயர்நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பே என் மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக கூறியது. என் வழக்கு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை படித்து பாருங்கள் அண்ணாமலை. இவ்வாறு அதில் கூறியிருக்கிறார்.