'அண்ணாமலை காவடி எடுத்தும் 40லும் தி.மு.க.,வுக்கே வெற்றி'
'அண்ணாமலை காவடி எடுத்தும் 40லும் தி.மு.க.,வுக்கே வெற்றி'
ADDED : பிப் 18, 2025 08:25 PM
சென்னை:'தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கும் ஆட்சி இது. முருகன் எங்களோடு தான் உள்ளார்,'' என, ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
'புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தியே தீருவோம்' என, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகிறார். 'தமிழகத்தை வேறு கோணத்தில் பார்த்து விடாதீர்கள்' என, முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக மக்கள் ஒன்றிணைந்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வெகுண்டு எழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குகின்றனர். எடுத்த நடவடிக்கையில் இரும்பு மனிதர் போல் உறுதியாக இருப்பவர் முதல்வர்; புதிய கல்விக் கொள்கையிலும் உறுதியாக இருப்பார்.
எல்.முருகன் பா.ஜ., தலைவராக இருந்தபோது, வேல் யாத்திரை நடத்தி, புரட்சி ஏற்படுத்த நினைத்தார். அவர் வேல் யாத்திரைக்கு பின் தான், தமிழக மண்ணில் திராவிட மாடல் ஆட்சியை உருவாக்கி காண்பித்தார் முதல்வர் ஸ்டாலின்.
அடுத்து அண்ணாமலை வந்தார். ஆன்மிகத்தை கையில் எடுத்து, தமிழகத்தை எப்படியாவது கைப்பற்றி விடலாம் என காவடி எடுத்து பார்த்தார்; காலில் செருப்பு அணியாமல் சபதம் போட்டுப் பார்த்தார். ஆனால், தமிழக மக்கள் 40 பார்லிமென்ட் தொகுதிகளையும் தி.மு.க., கூட்டணிக்கு அளித்தனர்.
தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கும் ஆட்சி, தி.மு.க., ஆட்சி. இந்த ஆட்சியைபோல் வேறு எந்த ஆட்சியிலும் தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்த்தது இல்லை. அறுபடை வீடுகளை புனரமைக்கும் பணிக்கு, 817 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்த்திருக்கிறோம். தமிழ் கடவுள் முருகன் எங்களோடு தான் உள்ளார்.
திருப்பரங்குன்றம் சம்பவத்தை கையில் எடுத்து, அரசியலாக்க முயற்சிக்கின்றனர். இனத்தால், மொழியால், மதத்தால், தமிழக மக்களை பிளவுபடுத்தி பார்க்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.