'அமரன்' படம் ராணுவத்துக்கு சமர்ப்பணம்; அண்ணாமலை பாராட்டு
'அமரன்' படம் ராணுவத்துக்கு சமர்ப்பணம்; அண்ணாமலை பாராட்டு
ADDED : நவ 04, 2024 11:07 AM

லண்டன்: ராணுவ வீரர்களுக்கும், உயிர் தியாகம் செய்தவர்களுக்கும் அமரன் படம் சமர்ப்பணம் என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பாராட்டி உள்ளார்.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கைவண்ணத்தில், சிவ கார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வெளியாகி இருக்கும் படம் அமரன். ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக கொண்ட உருவான இப்படம் பலரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந் நிலையில் லண்டனில் உள்ள தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அங்கிருந்த படியே அமரன் படத்தை பார்த்துள்ளார். படம் பார்த்த அவர், எக்ஸ் வலைதள பதிவில் அமரனை புகழ்ந்து நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அந்த பதிவின் விவரம் வருமாறு;
அமரன் படத்தை பார்க்க நேர்ந்தது. பல்வேறு தருணங்களில் இந்த படம் மிக முக்கியமான ஒன்று. நமது ராணுவ வீரர்கள் துணிச்சல். தைரியம், நேர்மையின் மூலம் மக்களுக்காக எத்தனையோ தியாகங்களை செய்கின்றனர். ஒரு ராணுவ வீரர் தமது நாட்டுக்காக தம்மையே அர்ப்பணிக்கும் போது, அவரது குடும்பம் அனுபவிக்கும் வேதனையை மிக சிறப்பாக இப்படம் பதிவு செய்துள்ளது.
சிலர் என்றுமே நாம் நினைப்பதை விட மிகவும் சிறப்பு உடையவர்களாக இருக்கின்றனர். அவர்கள் தங்கள் உடையை பெருமையுடன் அணிந்து விருப்பத்துடன் ஆபத்தை எதிர்கொள்வதே அதற்கு காரணம்.
மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை பல ஆண்டுகளுக்கு ஊக்கம் தரும் கதை. 2014ம் ஆண்டு நாட்டுக்காக அவர் செய்த தியாகம், நம்மில் ஏதோ ஒன்றை நாம் இழந்துவிட்டது போன்ற உணர்வை தருகிறது. நான் காக்கி சீருடையில் இருந்த அக்காலக்கட்டத்தில் எதிர்கொண்ட உணர்ச்சிகர தருணங்கள் நினைவுக்கு வருகின்றன.
ராஜ்குமார் பெரியசாமியின் சிறப்பான இயக்கம், சிவ கார்த்திகேயனின் அபாரமான நடிப்பு, திரை வாழ்க்கையில் வேறு யாராலும் செய்திருக்க முடியாத சாய் பல்லவியின் கதாபாத்திரம், விறுவிறு இசை, ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது. படத்தை தயாரித்த கமல்ஹாசனுக்கு நன்றிகள்.
இப்படம் பணியின் போது உயிரை அர்ப்பணம் செய்த அனைத்து வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், பணியில் உள்ள வீரர்களுக்கு பெருமை சேர்ப்பதாகவும் இருக்கிறது. நமது ராணுவ படைகள் நீடுழி வாழ்க. நீங்கள் தான் சிறந்தவர்கள் என்பதை பெருமையுடன் கூறுகிறோம். படத்தை கொடுத்த அமரன் படக்குழுவுக்கு வாழ்த்துகள்.
இவ்வாறு தமது எக்ஸ்வலை தள பதிவில் அண்ணாமலை கூறி உள்ளார்.