தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/அரசுப்பள்ளிகளில் இலவசமாக 3 மொழி கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள்; அண்ணாமலை கேள்வி

அரசுப்பள்ளிகளில் இலவசமாக 3 மொழி கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள்; அண்ணாமலை கேள்வி

அரசுப்பள்ளிகளில் இலவசமாக 3 மொழி கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள்; அண்ணாமலை கேள்வி


ADDED : பிப் 17, 2025 05:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2025 05:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள் என்று தமிழக அரசுக்கு பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து காணொளி ஒன்றை அவர் வெளியிட்டு உள்ளார். அதில் கூறி இருப்பதாவது; 1965ம் ஆண்டில் இருந்து தமிழகத்தில் ஒரு மொழியை திணித்து அதைத்தான் படிக்க வேண்டும் என்று சொல்லி, தமிழக மக்களை எல்லாம் கிளர்ச்சி அடைய செய்து காங்கிரஸ் கட்சி பெரும் பிரச்னையை செய்தது.

கடந்த 2019ம் ஆண்டு மே 31ம் தேதி புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை கமிட்டி தருகிறது. அந்த அறிக்கை பிரதமருக்கு கொடுக்கப்பட்டு இருந்த போது, அதில் எல்லோரும் 3 மொழிகள் கற்க வேண்டும். முதல் மொழி தாய்மொழியாக இருக்க வேண்டும். 2வது மொழி ஆங்கிலமாக இருக்க வேண்டும். 3வது மொழி கட்டாயம் ஹிந்தியாக இருக்க வேண்டும் என்று இருந்தது.

கேபினட்டில் இந்த வரைவு அறிக்கையை வைத்து, அது ஏற்புடையது அல்ல என்று கூறி ஜூன் 3ம் தேதி 2019ம் ஆண்டு இந்த கமிட்டியின் அறிக்கையை மாற்றுகிறார். 3 மொழிகள் கற்க வேண்டும் என்பது உண்மை. 3வது மொழியாக கட்டாயம் ஹிந்தி இருக்கக்கூடாது, இந்திய மொழிகளில் உங்களுக்கு பிடித்த ஏதோ ஒரு மொழியை கற்றுக் கொள்ளுங்கள் என்றார்.

மும்மொழிக் கொள்கையில் ஹிந்தி என்பது கட்டாயம் என்று தான் கமிட்டி அறிக்கை கொடுத்திருந்தது. பிரதமர் மோடி அதை மாற்றி, பிடித்த மொழியை கற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னார். என்னுள் அது தனிப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்தியது. ஹிந்தி தெரியாத மாநிலங்களில் உள்ளவர்கள் எப்படி யோசிப்பார்கள் என்று அவர் (பிரதமர் மோடி) யோசித்திருக்கிறார்.

ஆனால் தமிழகத்தில் 1965ம் ஆண்டு பழைய பஞ்சாங்க மாடலை தூக்கிக் கொண்டு வருகின்றனர். 'ஹிந்தி மொழியை திணிக்கின்றனர், ஆர்ப்பாட்டம் செய்ய போகிறோம்' என்று கூறுகின்றனர். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிப்பவர்கள் 52 லட்சம் பேர். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 56 லட்சம் பேர். அவர்களில் 30 லட்சம் பேர் வெவ்வேறு பாடத்திட்டங்களில் 3 மொழிகள் படிக்கின்றனர்.

இவ்வளவு பேசும் அமைச்சர் மகேஷ் மகன், தனியார் பள்ளியில் தமிழ் மொழிக்கு பதிலாக பிரெஞ்ச் மொழி படிக்கிறார். உங்கள் மகன் தனியார் பள்ளியில் பிரெஞ்ச் படிக்கலாம்? ஆனால் இந்த 52 லட்சம் பேர், அரசு பள்ளியில் தட்டுத்தடுமாறி, லட்சக்கணக்கான மாணவர்கள் மரத்தடியில் வெயிலில் உடைந்த கரும்பலகையை வைத்துக் கொண்டு குறைவான ஆசிரியர்கள் இருக்கும் நேரத்தில் அவர்கள் படித்துக் கொண்டு இருக்கின்றனர். இதை எப்படி ஏற்க முடியும்.

முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து ஆரம்பித்து, கடைசி தி.மு.க., கவுன்சிலர் வரை நான் சொல்கிறேன். நான் யாரையும் எடுக்கவில்லை, தி.மு.க.,வில் உள்ள கடைக்கோடி கவுன்சிலர் மகன் வரை தனியார் பள்ளியில் 3 மொழிகள் படிக்கின்றனர். ஏன் என்றால் அவர்கள் நன்றாக படிக்க வேண்டும், வெளிநாடு போக வேண்டும். ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் 52 லட்சம் மாணவர்கள் நாம் என்ன பண்ண வேண்டும். இவர்களுக்கு போஸ்டர் ஒட்டணும். இதுதான் அவர்கள் நோக்கம்.

தமிழகத்தில் கல்வியை வைத்து, மொழியை வைத்து இருதரப்பட்ட மக்களாக உருவாக்கிவிட்டனர். ஒருவன் மேலே, மேலே போய்க் கொண்டே இருப்பான். கல்வித்தகுதி குறைவாக கொடுத்து இன்னொரு தரப்பட்ட மனிதன், அவர்களுக்கு நாம் பணி செய்ய வேண்டும்.

அரசு பள்ளியில் படிப்பவர்களுக்கு அந்த 2 மொழிகளும் உருப்படியாக தெரிகிறதா? தமிழை வைத்து அரசியலில் தஞ்சம் அடைந்து பிழைப்பு நடத்துகிறார்கள் தி.மு.க.,வினர். தமிழ் மொழியை வைத்து பிழைப்பு நடத்துகின்றனர்.

2024ம் ஆண்டில் ஒரு அமைப்பு ஒவ்வொரு மாநிலத்திலும் கல்வித்தகுதி எப்படி உள்ளது என்று சோதித்து இருக்கிறது. நிறைய என்.ஜி.ஓ.,க்கள் சேர்ந்து இப்படி ஆய்வு நடத்துகின்றனர். அந்த ஆய்வில், தமிழகத்தில் 87 சதவீதம் மாணவர்கள் (3ம் வகுப்பு மாணவர்கள்)அவர்களது தாய்மொழியான தமிழில் எழுதிய பாடம் (2ம் வகுப்பு பாடம்) ஒன்றை படிக்க முடியவில்லை என்று தெரிகிறது.

உ.பி.,யில் 73 சதவீதம், குஜராத்தில் 75 சதவீதம்,மஹாராஷ்டிராவில் 67 சதவீதம், பீகாரில் 80 சதவீதம் பேரால் தாய்மொழியில் உள்ள பாடத்தை படிக்கமுடியவில்லை. இதே பாடத்தை தமிழக அரசு பள்ளியில் உள்ள 5ம் வகுப்பு மாணவரிடம் கொடுத்து படிக்க கூறுகின்றனர். அவர்களில் 63 சதவீதம் பேரால் அதை படிக்க முடியவில்லை. இதே பாடத்தை 8ம் வகுப்பு மாணவர்கள் 37 சதவீதம் பேரால் படிக்க முடியவில்லை. இதுதான் தமிழை நீங்கள் வளர்த்த லட்சணமா? இருமொழிக்கொள்கை தோல்வி அடைந்துவிட்டது என்று நீங்கள்(தி.மு.க.,) ஒத்துக் கொள்ள மாட்டீர்களா?

இருமொழிக் கொள்கையில் ஜெயித்தவர்கள் யார் என்றால் முதல்வர் ஸ்டாலின், தி.மு.க., கடைக்கோடி கவுன்சிலர்கள் வரை. உங்கள் குழந்தைகள் தனியார் பள்ளில் படிக்கின்றனர். ஆனால் அரசு பள்ளியில் இருக்கும் மாணவர்கள் மேலே வரக்கூடாது.

ஒருதலைப்பட்ட சமுதாயம் மேல்நோக்கி செல்லும், கல்வித்திறன் குறைவாக கொடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்ட சமுதாயம், அவர்களுக்கு ஊழியம் செய்வதற்காக கீழ்நோக்கி செல்லும் என்பதை தமிழகத்தை தவிர வேறு எங்கும் உதாரணமாக பார்க்க முடியாது. முதல்வர் வெட்கப்பட வேண்டும். ஹிந்தியை கொண்டு வருகிறோம் என்று யார் சொன்னார்கள்.

வரி கொடுக்க வேண்டாம் என்று சீமான் சொல்கிறார். 2016ம் ஆண்டு அவரின் தேர்தல் அறிக்கையில் மொழிக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். அதில், பயிற்று மொழி தமிழ், கட்டாய பாடமொழி ஆங்கிலம், விருப்ப மொழியாக ஹிந்தி உள்பட உலகத்தில் உள்ள எல்லா மொழிகளும் இருக்க வேண்டும் என்று கூறி உள்ளார். புதிய கல்விக் கொள்கைக்கும், சீமான் தேர்தல் அறிக்கைக்கும் என்ன வித்தியாசம்?

5ம் வகுப்பு வரை தாய்மொழியில் தான் படிக்க வேண்டும் என்று சொல்கிறோம். இதை நீங்கள் செய்யவில்லையே, அண்ணாதுரை செய்யவில்லையே, ஸ்டாலின் செய்யவில்லை. ஆனால் பிரதமர் மோடி செய்துள்ளார். புதிய கல்விக்கொள்கையில் என் மகன், உங்கள் மகன், யாராக இருந்தாலும் 5ம் வகுப்பு வரை தாய்மொழியில் தான் படிக்க வேண்டும். எதற்கு இந்த டிராமா போடுகிறீர்கள். சீமான், நீங்கள் சொன்னதை தான் சொல்லியிருக்கிறோம்.

தி.மு.க.,வினர் நடத்தும் பள்ளிகளில் 3 மொழிகள். அதிலும் தமிழில் பேசினால் அபராதம் விதிக்கப்படும் அளவுக்கு பள்ளிகளை நடத்துகின்றீர்கள். தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நன்றாக புரிந்து கொள்ளுங்கள். உங்களின் பிள்ளைகள் எங்கு படிக்கின்றனர் என்று வெள்ளை அறிக்கை கொடுங்கள்.

பா.ஜ.,வில் எங்கள் பிள்ளைகள் எங்கு படிக்கின்றனர் என்று நான் வெள்ளை அறிக்கை கொடுக்கிறேன். முதல்வர் ஸ்டாலின் அவர்களே, உங்கள் பேரன் எங்கு படிக்கிறார் என்று சொல்லுங்கள். நம் ஊரில், நம் மொழியை கொடி பிடித்து, உயிரை கொடுத்து நிற்போம், உறுதியாக நிற்போம். தமிழ் மொழிக்கு எப்போதும் அழிவு வராது.

இந்தியாவில் எல்லோரும் 3 மொழி கொள்கைக்கு போய்விட்டனர். மத்திய அமைச்சர் பிரதான் சொன்னதை ஏன் மாற்றிக் கூறுகிறீர்கள். 2024ம் ஆண்டு PMSHRI பள்ளிக்கூடங்களை ஏற்றுக் கொள்கிறேன் என்று சொன்னீர்கள், தலைமை செயலாளர் கடிதம் போட்டார் இல்லை என்று சொல்லுங்கள். முதல்வர் அனுமதியின்றி தலைமை செயலாளரே கடிதம் போட்டாரா?

தமிழகத்துக்கு கல்வியில் என்ன பணம் கொடுக்க வேண்டுமோ, அதை மத்திய அரசு தரும். அமைச்சர் பிரதான் பேசியதை திரித்து மாற்றி பேசாதீர்கள். உங்கள் சவாலை ஏற்றுக் கொண்டுவிட்டோம். ஆர்ப்பாட்டம் பண்ணுங்கள். பா.ஜ.,கவும் களத்தில் இருக்கும், நாங்களும் மக்களிடம் பேசுவோம். மக்கள் யார் பக்கம் என்று பார்ப்போம்.

இவ்வாறு அவர் பேசி உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us