பொள்ளாச்சி மகாலிங்கம் மொழிபெயர்ப்பு விருது அறிவிப்பு
பொள்ளாச்சி மகாலிங்கம் மொழிபெயர்ப்பு விருது அறிவிப்பு
ADDED : செப் 21, 2024 01:11 AM
சென்னை:பொள்ளாச்சி நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மைய இயக்குனர், சிற்பி பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
பொள்ளாச்சியில், கடந்த 17ம் தேதி, நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு விருது தேர்வுக்கான நடுவர் குழு கூட்டம் நடந்தது. அதில், மூன்று பரிசுகளுக்கான மொழி பெயர்ப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அக்டோபர், 2ல், சென்னை அடையாறில் உள்ள டி.என்.ராஜரத்தினம் கலை அரங்கில் விருதுகள் வழங்கப்படும்.
மலையாள எழுத்தாளர் கே.ஆர்.மீராவின், 'ஆராச்சார்' நாவலை, அதே தலைப்பில் மொழிபெயர்த்த செந்தில்குமார், நாகாலாந்து எழுத்தாளர்களின் படைப்புகளை, 'கதவுகள் திறக்கப்படும் போதினிலே' என்ற தலைப்பில் மொழிபெயர்த்த வின்சென்ட் ஆகியோர், முதல் பரிசுக்கு தேர்வாகி உள்ளனர். அவர்களுக்கு, 2 லட்சம் ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும்.
கென்ய எழுத்தாளர் கூகி வா தியாங்கோவின் நாவலை, 'சிலுவையில் தொங்கும் சாத்தான்' என்ற தலைப்பில் மொழிபெயர்த்த அமரந்தா, சிங்கராயர் ஆகியோரும், ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முரகாமியின் நாவலை, 'காப்கா கடற்கரையில்' என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ள கார்த்திகை பாண்டியனும், இரண்டாம் பரிசுக்கு தேர்வாகி உள்ளனர். அவர்களுக்கு, 50,000 ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும்.
மேலும், அ.ஜாகிர்ஹுசைன், சு.ஆ.வெங்கடசுப்புராய நாயகர், பி.ஆர்.மகாதேவன், கமலக்கண்ணன் ஆகியோருக்கு, மூன்றாம் பரிசு வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கு தலா 25,000 ரூபாய் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.