வேலுமணி வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல்
வேலுமணி வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல்
ADDED : டிச 05, 2025 03:45 AM

சென்னை: அ.தி.மு.க., ஆட்சியில், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, தன் உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களுக்கு 'டெண்டர்' வழங்கியதில், 98.25 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக, தி.மு.க., தரப்பில், லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது.
விசாரணை நடத்தி லஞ்ச ஒழிப்புத் துறை, அரசிடம் அறிக்கை அளித்தது. அதைத்தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும்படி பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என, லஞ்ச ஒழிப்பு துறைக்கு எதிராக, அறப்போர் இயக்கம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 'வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, இரு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர, அனுமதி கேட்க, 19 மாதங்கள் எடுத்துக் கொண்டது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்' என, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு, நேற்று விசராணைக்கு வந்தது. அப்போது தாமதம் குறித்து, வழக்கில் மூன்று புலன் விசாரணை அதிகாரிகளாக இருந்த, மயில்வாகனன், விமலா மற்றும் டாங்கரே பிரவீன் ஆகியோர் தரப்பில், தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதையடுத்து நீதிபதி, இந்த மனுக்கள் தொடர்பாக, அறப்போர் இயக்கம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 15ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

