பாஸ்போர்ட் புதுப்பிக்க கோருவதை பச்சாதாபத்துடன் அணுகுங்கள்: ஐகோர்ட்
பாஸ்போர்ட் புதுப்பிக்க கோருவதை பச்சாதாபத்துடன் அணுகுங்கள்: ஐகோர்ட்
ADDED : ஆக 22, 2026 10:17 PM

சென்னை: 'வெளிநாடுகளில் வேலை செய்வோர், பாஸ்போர்ட்டை புதுப்பிக்க கோரினால், பச்சாதாபத்துடன் அணுக வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
கத்தார் நாட்டில் பணியாற்றி வரும் புதுச்சேரியைச் சேர்ந்த கண்ணன் என்பவர், வரும் அக்டோபர் மாதத்துடன் காலாவதியாக உள்ள பாஸ்போர்ட்டை புதுப்பிக்க உத்தரவிடக்கோரி, கடந்தாண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அவரின் விண்ணப்பத்தை பரிசீலிக்க, பாஸ்போர்ட் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
அதன்படி, கத்தாரில் உள்ள இந்திய துாதரகத்தை அணுகும்படி, இந்திய அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால், கத்தாரில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகள், அவரை இந்திய பாஸ்போர்ட் ஆணையத்தை நாடும்படி அறிவுறுத்தினர்.
இதை எதிர்த்து, கண்ணன் சார்பில் அவரது மனைவி செண்பகவல்லி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, 'வெளிநாடுகளில் வேலை செய்து, குடும்பத்துக்கு ஆதரவாகவும், அன்னியச் செலாவணி வாயிலாக நாட்டின் பொருளாதாரத்துக்கும் பங்களிப்பு வழங்குகின்றனர்.
பாஸ்போர்ட்டை புதுப்பிக்கக் கோரும் போது, சட்டப்பூர்வ தகுதி இழப்பு ஏதும் இல்லாவிட்டால், அவர்களின் குறையை பச்சாதாபத்துடன் அணுகி தீர்க்க வேண்டும்' என, பாஸ்போர்ட் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பின், 'கண்ணன் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து, நான்கு வாரங்களில் இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
