மாணவர்கள் சேர்க்கை குறைவால் பல விடுதிகள் மூடப்படும் நிலையில் புதிய விடுதிகள் தேவையா?
மாணவர்கள் சேர்க்கை குறைவால் பல விடுதிகள் மூடப்படும் நிலையில் புதிய விடுதிகள் தேவையா?
ADDED : டிச 16, 2025 06:28 AM

சென்னை: 'தமிழகத்தில், பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ளது' என, ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகள் மூடப்படும் நிலையில், 40 கோடி ரூபாயில், புதிய விடுதிகள் கட்டப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஆதிதிராவிடர் நலத்துறை கீழ் செயல்படும் 1,331 சமூக நீதி விடுதிகளில், கடந்த மூன்று ஆண்டுகளாக மாணவர்கள் சேர்க்கை இல்லாத மற்றும் குறைந்த மாணவர்கள் உள்ள விடுதிகளை அதிகாரி கள் மூடி வருகின்றனர்.
ரூ.40 கோடி நடப்பாண்டில் நுாற்றுக்கும் அதிகமான சமூக நீதி விடுதிகள் மூடப்பட்டுள்ளன. மேலும், 'கலப்பு விடுதிகள்' என்ற திட்டத்தின் கீழ், அருகருகே செயல்படும் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவியர் விடுதியை இணைத்து, ஒரே விடுதியாக அரசு நடத்தி வருகிறது.
இந்நிலையில், விடுதிகள் மூடப்பட்ட சிவகங்கை, கடலுார், ஈரோடு, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில், 40 கோடி ரூபாய் செலவில், நவீன வசதிகளுடன் புதிய விடுதிகள் கட்டப்படுவது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி கூறியதாவது:
ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைய, தரமற்ற உணவு மட்டுமின்றி, சமையலர், காவலர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதும் முக்கிய காரணம்.
ஒரே காவலர், குறைந்தபட்சம் நான்கு விடுதிகளுக்கும் காவலாளியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதனால், பெற்றோர் மற்றும் மாணவர்கள் இடையே, ஆதிதிராவிடர் நல விடுதிகளின் மீதான நம்பிக்கை குறையத் துவங்கி உள்ளது. இதுவே, விடுதிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைய காரணம்.
விடுதியில் மாணவர் சேர்க்கை குறைகிறது என்றால், அதற்கான காரணத்தை கண்டறிந்து பிரச்னையை சரிசெய்வது அரசின் கடமை. ஆனால், ஆதிதிராவிடர் நலத்துறையினர் அவ்வாறு செய்வதில்லை.
ஆய்வு மேற்கொள்ளாமல் விடுதியை மூடுகின்றனர். இதனால், பாதிக்கப்படுவது மாணவர்கள் தான். விருதுநகர், சிவகங்கை மாவட்டத்தில், மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள 10 விடுதிகளை மூடியுள்ளனர்.
நடவடிக்கை அதே மாவட்டத்தில், தற்போது கோடிக்கணக்கான ரூபாய் செலவில் விடுதிகள் கட்டப்படுவது, பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. இதற்கு, மூடிய விடுதிகளை மேம்படுத்தி தொடர்ச்சியாக நடத்தி இருக்கலாம்.
துறை அமைச்சர், இவ்விவகாரத்தில், உரிய நடவடிக்கை எடுப்பதோடு, விடுதிகள் மூடப்படுவதற்கான காரணத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
விளம்பர நாடகம்
அண்ணாமலை விமர்சனம்
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை: ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், தமிழகம் முழுதும் நடத்தப்படும் மாணவர் விடுதிகளில், 100க்கும் மேற்பட்ட விடுதிகள் மூடப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. சுத்தமான அறைகள், சுகாதாரமான குடிநீர், தரமான உணவு என்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாததால், மாணவர்கள், இந்த விடுதிகளில் சேர்ந்து படிக்க விருப்பம் காட்டுவதில்லை. மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதால், அது கால்நடைகளுக்கு உணவாக விற்கப்படுவதை, ஏற்கனவே சுட்டிக் காட்டியிருந்தோம். பட்டியல், பழங்குடியின சமூக மக்கள் முன்னேற்றத்துக்காக, மத்திய அரசு வழங்கும் நிதியை செலவிடாமல், ஆண்டுதோறும் திருப்பி அனுப்பி கொண்டிருக்கிறது தி.மு.க., அரசு. இந்த அழகில், சமூக நீதி விடுதி என்று பெயர் மாற்றம் செய்தோம் என, இரு நாட்கள் விளம்பர நாடகம் நடத்தி, தனக்கு தானே பெருமை பேசுகிறார் ஸ்டாலின். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குறைதீர் கூட்டம்
நடத்தவில்லை
ஆதிதிராவிடர் நல விடுதி காப்பாளர்கள் சிலர் கூறுகையில், 'துறை செயலர் தலைமையிலான குறைதீர் கூட்டம், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. 'துறையில் உள்ள பிரச்னைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், அதிகாரிகள் கூட்டம் நடத்த முன்வராமல் உள்ளனர்' என்றனர்.

