என்னோடு நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? ஸ்டாலினுக்கு இபிஎஸ் பகிரங்க சவால்
என்னோடு நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? ஸ்டாலினுக்கு இபிஎஸ் பகிரங்க சவால்
ADDED : டிச 28, 2025 12:44 AM

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
கள்ளக்குறிச்சி அரசு விழாவில், மேடையேறிய முதல்வர் ஸ்டாலின், எனக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார். அவர் மேடை போட்டு பேசிய கள்ளக்குறிச்சி மாவட்டமே, என் தலைமையிலான அ.தி.மு.க., ஆட்சியில் தான் உருவானது. அவர் நின்று பேசிய, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி, அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகளை சொல்லும்.
அ.தி.மு.க., ஆட்சியின் திட்டங்களுக்கு, 'ரிப்பன்' வெட்டி, 'ஸ்டிக்கர்' ஒட்டுவதையே, 95 சதவீதம் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார்; அவருக்கு 5 சதவீத திட்டங்கள் பற்றி கேள்வி கேட்க கொஞ்சம் கூட தகுதி இல்லை.
தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு சீர்குலைந்துள்ளது. எங்கு திரும்பினாலும் ஆசிரியர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என, அனைவரும் நடுத்தெருவில் போராடி வருகின்றனர். ஆனால், கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல், சட்டை காலரை துாக்கி விட்டு, முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்.
இருபது லட்சம் மாணவர்களுக்கு, 'லேப்டாப்' என போகிற போக்கில் அளந்து விட்டால், தமிழக மக்கள் நம்பி விடுவரா; எத்தனை 'லேப்டாப்' யாருக்கு போய் சேர்ந்தது? நான்கரை ஆண்டுகள் கொடுக்காமல், தேர்தல் பயத்தால், தற்போது அவசர கதியில் அரைகுறையாக கொடுக்கப் போவதை பெருமையாக பேசுவதற்கு கூச்சப்பட வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின் மூச்சிரைக்க வாசித்த பட்டியல் என்பது, அவர் நடத்திய 'போட்டோ ஷூட்'களின் பட்டியல். அவர் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில், எத்தனை நிறைவேற்றப்பட்டது என்பதையும், வாசிக்கத் தயாரா?
எனக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார். ஆனால், பல ஆண்டுகளாக உங்களுக்கு நான் வைத்த சவால் நிலுவையில் இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் என்னோடு, நேருக்கு நேர் மேடை ஏறி விவாதிக்க தயாரா?
அ.தி.மு.க., ஆட்சி பற்றி, அவர் என்ன கேட்டாலும் பதில் சொல்ல நான் தயார். தி.மு.க., ஆட்சி பற்றி எனது கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லத் தயாரா? முதல் கேள்வியாக, 'நீட்' தேர்வு ரத்து என்ன ஆச்சு என்பதற்கு பதில் சொல்ல வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

