ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; 17 பேர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; 17 பேர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து
UPDATED : ஆக 06, 2025 01:27 PM
ADDED : ஆக 06, 2025 11:17 AM

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட 17 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது.
கடந்த 2024ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி பெரம்பூரில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய பொன்னை பாலு, ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி, தோட்டம் சேகரின் மனைவி மலர்க்கொடி, பிரபல ரவுடி நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 28 பேரை கைது செய்தனர்.
அதில் ரவுடி திருவேங்கடம் போலீசில் இருந்து தப்பி ஓட முயன்றதால் சுட்டுக் கொல்லப்பட்டார். தலைமறைவாக இருந்த சீசிங் ராஜா சமீபத்தில் கைது செய்யப்பட்டு என்கவுன்டர் செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 27 பேர் மீதும், செம்பியம் காவல்நிலைய போலீசார், 4,832 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை, எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இவர்களில் 26 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது, நாகேந்திரன் உள்பட 17 பேர் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 06) 17 பேரின் குண்டர் சட்டத்தை ரத்து செய்து, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், லட்சுமி நாராயணன் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
''குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதால், அவர்களுக்கு ஜாமின் வழங்கக்கூடாது. வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டே ஜாமின் மனுக்களை பரிசிலீக்க வேண்டும்'' என நீதிபதிகள் தெரிவித்தனர்.