மின் இணைப்புக்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம்; உதவி பொறியாளர், வணிக ஆய்வாளர் கைது!
மின் இணைப்புக்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம்; உதவி பொறியாளர், வணிக ஆய்வாளர் கைது!
UPDATED : பிப் 15, 2025 07:47 PM
ADDED : பிப் 15, 2025 07:38 PM

ஓசூர்: மின் இணைப்புக்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர், வணிக ஆய்வாளர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 38. பெங்களூரு தனியார் மருத்துவமனையில் ஊழியராக உள்ளார்; ஓசூர் பேகேப்பள்ளி பிருந்தாவன் கார்டன் பகுதியில் சொந்த வீடு கட்டி வருகிறார்; இதற்கு மின் இணைப்பு கேட்டு, சிப்காட் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அதை பரிசீலனை செய்த மின்வாரிய உதவி பொறியாளர் சிவகுரு, 43, கமர்சியல் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், 45, ஆகியோர், புதிய வீட்டிற்கு சென்று பார்த்து விட்டு, புதிய இணைப்பு வழங்க, 35,000 ரூபாய் லஞ்சம் வழங்க வேண்டும் என கேட்டனர். முதற்கட்டமாக, 5,000 ரூபாயை ராஜேந்திரன் வழங்கியுள்ளார்.
மீதமுள்ள பணத்தை வழங்க விரும்பாத அவர், மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி., நாகராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய, 30,000 ரூபாயை, ராஜேந்திரனிடம் கொடுத்தனுப்பினர். அதை எடுத்து கொண்டு சிப்காட் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்ற அவர், உதவி பொறியாளர் சிவகுரு மற்றும் கமர்சியல் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோரிடம் பணத்தை வழங்கினார்.
அதை வாங்கி கொண்ட அவர்கள், இந்த தொகை போதாது என்றும், மொத்தம், 2 லட்சம் ரூபாய் வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இருவரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

