சட்டசபை நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு மற்ற மாநிலங்களில் விபரம் சேகரிப்பு
சட்டசபை நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு மற்ற மாநிலங்களில் விபரம் சேகரிப்பு
UPDATED : மார் 12, 2024 07:24 AM
ADDED : மார் 12, 2024 01:25 AM

சென்னை: மற்ற மாநிலங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகளை அறிந்த பின், தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்புவது குறித்து, கொள்கை முடிவு எடுக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யக்கோரி, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்; லோக் சத்தா கட்சியின் தமிழக தலைவர் ஜெகதீஸ்வரன் ஆகியோர், உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இவ்வழக்கில், தன்னையும் இணைத்துக்கொள்ள அனுமதி கோரி, அ.தி.மு.க., கொறடா வேலுமணியும் மனுத்தாக்கல் செய்தார்.
மனுக்கள், தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா தலைமையிலான, 'முதல் பெஞ்ச்' முன், மீண்டும் விசாரணைக்கு வந்தன. அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, 'மற்ற மாநிலங்களில் என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது என்ற தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. ஏழு மாநிலங்களில் இருந்து விபரங்களை பெற்றுள்ளோம். மீதியுள்ள மாநிலங்களில் இருந்து விபரங்களை பெற்ற பின், நேரடி ஒளிபரப்பு விவகாரத்தில் கொள்கை முடிவு எடுக்கப்படும்' என்றார்.
அதைத்தொடர்ந்து, முதல் பெஞ்ச், 'நேரடி ஒளிபரப்பு செய்ய முடியாவிட்டால், ஐந்து நிமிடங்கள் தாமதமாக ஒளிபரப்பலாம். அந்த இடைவெளியில், சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டிய பகுதிகளை நீக்கி விட்டு ஒளிபரப்பலாம்' என்று யோசனை தெரிவித்தது.
விசாரணையை, ஏப்ரல் 16க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

