ADDED : அக் 23, 2024 12:39 AM

சென்னை:தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில், பல்வேறு போட்டிகளில் பங்கேற்க உள்ள 13 பேருக்கு, 1 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்.
தமிழக விளையாட்டு வீரர் - வீராங்கனையருக்கான பயிற்சி, உபகரணங்கள், வெளிநாடுகளுக்கு செல்லும்போது ஏற்படும் செலவுத்தொகை உள்ளிட்டவற்றை வழங்கும் வகையில், தனியார் பங்களிப்புடன், 'தமிழ்நாடு சாம்பியன்ஸ்' அறக்கட்டளை செயல்படுகிறது. அதிலிருந்து கடந்த மூன்றாண்டுகளில், 3,350 வீரர் - வீராங்கனையருக்கு, 110 கோடி ரூபாய் அளவில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், 13 விளையாட்டு வீரர் - வீராங்கனையருக்கு, 1 கோடியே 36,312 ரூபாய் மதிப்பிலான விளையாட்டு மேம்பாட்டு நலத்திட்ட உதவிகளை, துணை முதல்வர் உதயநிதி நேற்று வழங்கினார்.
நிகழ்ச்சியில், விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.