பள்ளி மாணவிகளுக்கு அலைபேசியில் ஆபாச படம்; போக்சோவில் உதவியாளர் கைது
பள்ளி மாணவிகளுக்கு அலைபேசியில் ஆபாச படம்; போக்சோவில் உதவியாளர் கைது
ADDED : ஜன 21, 2025 05:03 AM

காரியாபட்டி : விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணரில் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு அலைபேசியில் ஆபாச படம் காட்டிய அலுவலக உதவியாளரை அருப்புக்கோட்டை மகளிர் போலீசார் கைது செய்தனர்.
இப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ--மாணவியர் படிக்கின்றனர். சில தினங்களுக்கு முன் இப்பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. அதில் பாலியல் சீண்டல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது இரு மாணவிகள் விழிப்புணர்வு முகாம் நடத்திய அலுவலர்களிடம், அலுவலக உதவியாளராக பணிபுரியும் ராஜமாணிக்கம் அலைபேசியில் ஆபாச படங்களை தொடர்ந்து காண்பித்து தொந்தரவு செய்வதாக புகார் அளித்தனர்.
இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு குழு சார்பாக அருப்புக்கோட்டை மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அலுவலக உதவியாளரான ராஜமாணிக்கத்தை போக்சோவில் கைது செய்து விசாரிக்கின்றனர்.
மேலும் பலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் உள்ளதாக போலீசார் கூறினர்.