ஹிந்திக்கு துணையாக சமஸ்கிருதத்தையும் அழைத்து வர முயற்சி: உதயநிதி கண்டுபிடிப்பு
ஹிந்திக்கு துணையாக சமஸ்கிருதத்தையும் அழைத்து வர முயற்சி: உதயநிதி கண்டுபிடிப்பு
ADDED : ஜன 25, 2024 04:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: இன்றைக்கு ஹிந்திக்குத் துணையாக சமஸ்கிருதத்தையும் அழைத்து வர முயற்சிக்கின்றனர் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து உதயநிதி எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஹிந்தி ஆதிக்கமெனும் நெருப்பு தமிழகத்தை உரசாமல் இருக்க, தங்களையே தீக்கிரையாக்கிக் கொண்ட மொழிப்போர் தியாகிகளின் நினைவாக, தமிழகம் எங்கும் இன்றைய தினம் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.
கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய ஹிந்தி திணிப்பும், அதற்கெதிரான நம் சீற்றமும், இன்றும் விமான நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும், அஞ்சல் நிலையங்களிலும் தொடருகின்றன. இன்றைக்கு ஹிந்திக்குத் துணையாக சமஸ்கிருதத்தையும் அழைத்து வர முயற்சிக்கின்றனர். ஹிந்தி திணிப்பு மட்டுமல்ல எந்த திணிப்பும் தமிழகத்தை நெருங்க முடியாது. இவ்வாறு அந்த அறிக்கையில் உதயநிதி தெரிவித்துள்ளார்.