பயணி தவற விட்ட 3 பவுன் தங்கச்சங்கிலி: போலீஸில் ஒப்படைத்தார் ஆட்டோ டிரைவர்
பயணி தவற விட்ட 3 பவுன் தங்கச்சங்கிலி: போலீஸில் ஒப்படைத்தார் ஆட்டோ டிரைவர்
ADDED : மார் 07, 2025 06:33 PM

வத்தலக்குண்டு: பயணி தவற விட்ட 3 பவுன் தங்கச்சங்கிலியை, போலீசில் ஒப்படைத்தார் வத்தலக்குண்டு ஆட்டோ டிரைவர் மதன். அவரது நேர்மைக்கு, போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் மதன், 35. ஆட்டோ டிரைவர். வத்தலக்குண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர், இன்று ( மார்ச் 07) கட்டகாமன்பட்டியில் இருந்து ரெட்டியப்பட்டிக்கு பயணி ஒருவருடன் சவாரி சென்றார்.
பயணியை இறக்கி விட்டு திரும்பி வரும்போது, அவரது ஆட்டோவில் தங்கச்சங்கிலி கிடந்தது. தன் ஆட்டோவில் பயணித்தவர் தான் அதை தவற விட்டிருக்க வேண்டும் என்று டிரைவர் மதன் கருதினார். ஆனால், பயணியின் பெயர், முகவரி தெரியாத நிலையில், என்ன செய்வதென்று யோசித்த மதன், தங்கச்சங்கிலியை வத்தலக்குண்டு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.
இதற்கிடையில், நகையை தவற விட்ட விவசாயி கணேசனும் போலீஸ் ஸ்டேசனுக்கு வந்தார். போலீசார் முன்னிலையில், பயணி கணேசனிடம் ஆட்டோ டிரைவர் மதன், 3 பவுன் தங்கச் சங்கிலியை ஒப்படைத்தார். நேர்மையாக செயல்பட்ட ஆட்டோ டிரைவர் மதனை, நிலக்கோட்டை டி.எஸ்.பி., செந்தில் குமார், வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் சிலைமணி ஆகியோர் பாராட்டினர்.

