ADDED : நவ 28, 2024 09:45 PM
சென்னை:சென்னையை தொடர்ந்து, மாவட்டங்களில் இயக்கப்படும், 3,000க்கும் மேற்பட்ட டவுன் பஸ்களிலும் தானியங்கி கதவுகள் பொருத்த, அரசு போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து, போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில், 18,000க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு, 10,000 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
படிக்கட்டு பயணத்தை முழுமையாக தடுக்கும் வகையில், தானியங்கி கதவுகளை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், 600க்கும் மேற்பட்ட பழைய பஸ்களில், தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு உள்ளன.
அதைத் தொடர்ந்து, விழுப்புரம், கும்பகோணம் உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழகங்களில் ஓடும் டவுன் பஸ்களிலும், தானியங்கி கதவுகளை பொருத்த உள்ளோம். அதற்காக, 3,000க்கும் மேற்பட்ட டவுன் பஸ்களை அடையாளம் கண்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

