ADDED : ஏப் 18, 2025 12:51 AM
சென்னை:''சிறந்த சாதனை படைத்த கலைஞருக்கு, 10 லட்சம் ரூபாயுடன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும்,'' என, அமைச்சர் சாமிநாதன் அறிவித்தார்.
சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
↓கலை பண்பாட்டு துறை சார்பில், அனைத்து மாவட்டங்களிலும், தமிழிசை விழாக்கள் நடத்தப்படும். இதற்காக ஆண்டுக்கு, 2.06 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கப்படும்
↓தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில், இயல், இசை, நாட்டியம், நாடகம், கிராமிய கலைகளில், சிறந்த சாதனை படைத்த கலைஞர் ஒருவருக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருதும், 10 லட்சம் ரூபாயில் பரிசுத் தொகையும் வழங்கப்படும்
↓தமிழ்நாடு ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலை இணையதளம் மேம்படுத்தப்படும். மாணவர்களின் இசை திறனை மேம்படுத்த, புதிய செயலி உருவாக்கப்படும்
↓சென்னை அரசு அருங்காட்சியகத்தின் புவியியல், தாவரவியல், விலங்கியல், மானுடவியல் காட்சிக்கூடங்கள், 4 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்
↓திருப்பூர், துாத்துக்குடியில் புதிய அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும்
↓சென்னை அரசு அருங்காட்சியகத்தில், பார்வையாளர்கள் வசதிக்காக, 12 லட்சம் ரூபாயில், இரண்டு 'பேட்டரி' வாகனங்கள் வாங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.