UPDATED : ஜன 23, 2024 01:55 PM
ADDED : ஜன 23, 2024 07:08 AM

சென்னை: ''ராமர் மீது காங்கிரசுக்கு கோபம் இல்லை'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பேசினார்.
ராகுல், மணிப்பூரில் இருந்து, மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தின் போது, அசாம் மாநிலத்தில், அவரை பின்தொடர்ந்த வந்த வாகனங்கள் மீது கல்வீசி தாக்கப்பட்டன.
சங்கர்தேவ் சத்ரா கோவிலில் அவர் வழிபட அனுமதி வழங்கி, பின் மறுத்ததை கண்டித்து, தமிழக காங்கிரஸ் சார்பில், சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் அழகிரி தலைமை வகித்து பேசியதாவது: ராமர் காங்கிரசுக்கு விரோதமானவர் அல்ல. ராமரை காந்தியை போல் புகழ்ந்தது யாரும் இல்லை. எல்லா மதங்களுக்கும் காங்கிரஸ் உரிமை தருகிறது.
பிரதமர் மோடியால், உள்துறை அமைச்சர் பணியை செய்ய முடியாது. உள்துறை அமைச்சர் பணியை, எதிர்கட்சி தலைவரால் செய்ய முடியாது. அதேபோல் ராமருக்கு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்றால், சைவ வைணவ சிவாச்சாரியார்களை வைத்து நடத்த வேண்டும்.
ராமரின் பெயரால் ஓட்டுக்களை சேகரிக்க திட்டமிடுகிறார். ராமர் மீது ராவணனுக்கு வேண்டுமானால் கோபம் இருக்கலாம். ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு கோபம் இல்லை. இவ்வாறு அழகிரி பேசினார்.
அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:
ராமர் கோவில் விழாவை மகிழ்ச்சியாக நடத்த வேண்டிய நிலையில் படபடப்பாகவும், பதற்றமாகவும் பிரதமர் மோடி நடத்தியிருக்கிறார்.
ஜனாதிபதி திரவுபதி முர்முவை கைம்பெண் என்பதால் அயோத்தி கோவில் திறப்பு விழாவிற்கு அழைக்கவில்லை. நடிகர் ரஜினி, 500 ஆண்டு கால வலி என, குறிப்பிட்டுள்ளார்.
ரஜினி சினிமாவில் திறமைசாலி. ஆனால், அரசியலில், உலகத்தில் ரஜினி திறமைசாலி அல்ல. கட்சி ஆரம்பிக்கவே, தயாராக இல்லை'' என்றார். இவ்வாறு அழகிரி கூறினார்.

