கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் உறுதி
கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் உறுதி
UPDATED : ஜூலை 06, 2024 12:48 PM
ADDED : ஜூலை 06, 2024 09:34 AM

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்-ஐ கொலை செய்த குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும், பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது.
உரிய தண்டனை
ஆம்ஸ்ட்ராங்- ஐ இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தர போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆதரவாளர்கள் போராட்டம்
இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜிவ் மருத்துவமனை அருகே அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நேரத்தில் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
விஜய் கண்டனம்
''ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம், பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரது குடும்பத்துக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்'' என தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவரும், நடிகருமான விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.