பாலு எம்.பி., பதவியை பறிக்க சொல்கிறது ஹிந்து முன்னணி
பாலு எம்.பி., பதவியை பறிக்க சொல்கிறது ஹிந்து முன்னணி
ADDED : பிப் 08, 2024 07:09 AM

திருப்பூர்: ''தி.மு.க., - எம்.பி., பாலுவின் எம்.பி., பதவியைப் பறிக்க வேண்டும்'' என்று ஹிந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
லோக்சபாவில் நடந்த விவாதத்தின் போது, தி.மு.க., - எம்.பி., பாலு, மத்திய இணை அமைச்சர் முருகனை, 'தகுதி இல்லாத நபர்' என கூறி, சாதீய வன்மம் காரணமாக ஒட்டுமொத்த பட்டியலின சமுதாயத்தையே அவமானப்படுத்தியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது.
'நாங்கள் தான் சமூக நீதியை கொண்டு வந்தோம், சமத்துவத்தை கொண்டு வந்தோம்' என்று முழங்கும் தி.மு.க.,வினர், நிஜ வாழ்வில் சாதி வெறியுள்ளவர்கள் என்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. ஏற்கனவே ஆர்.எஸ்., பாரதி, ஆ.ராஜா, தயாநிதி மாறன் போன்றோரும் இதுபோன்று பேசியுள்ளனர்.
பாலு திருந்த போவதில்லை. அவரது கட்சியின் சித்தாந்தம் அப்படிப்பட்டது. தி.மு.க., ஒரு போதும், சாதிய மனநிலையை மாற்றாது. இதுபோன்ற வன்மப் பேச்சுகளையாவது நிறுத்த வேண்டுமெனில், பட்டியலின சமுதாயத்தை அவமானப்படுத்திய பாலுவின் எம்.பி., பதவி பறிக்கப்பட வேண்டும். அப்போது மட்டுமே, தி.மு.க.,வினர் வன்ம பேச்சுக்களை குறைக்க வாய்ப்புண்டு. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

