மணல் விற்பனை விவகாரம் அமலாக்கத்துறை சம்மனுக்கு தடை
மணல் விற்பனை விவகாரம் அமலாக்கத்துறை சம்மனுக்கு தடை
ADDED : ஜன 05, 2024 11:22 PM
சென்னை:நிர்ணயித்த அளவுக்கு மேல் குவாரிகளில் மணல் எடுத்து விற்றதாகவும், அந்த பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் புகார் வந்தது. அதன்படி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.
பல இடங்களில் சோதனை நடத்தி, ஆவணங்களை கைப்பற்றியது. விசாரணைக்கு ஆஜராகும்படி சம்பந்தப்பட்ட கலெக்டர்களுக்கு 'சம்மன்' அனுப்பியது.
அதை எதிர்த்து கலெக்டர்கள் வழக்கு தொடர்ந்தனர். அமலாக்கத்துறை சம்மனுக்கு ஐகோர்ட் தடை விதித்தது.
அதை அடுத்து, குவாரி அதிபர்களும் கோர்ட்டை நாடினர். சென்னை ராஜ்குமார் ஆனைமுத்து, புதுக்கோட்டை சண்முகம் ராமச்சந்திரன், திண்டுக்கல ரத்தினம் ஆகிய மூன்று பேர் தனித்தனியே வழக்கு போட்டனர். மனுக்களில அவர்கள் கூறியதாவது:
அமலாக்கத்துறை விசாரணைக்கு அடிப்படையாக உள்ள வழக்கில், எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. 2018-ல் இருந்து 2023 வரை, நான்கு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.
அவற்றில், எந்த வழக்கிலும் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை; எங்களை குற்றம் சாட்டவும் இல்லை.
எங்களுக்கு அனுப்பிய சம்மன் தெளிவில்லாமல் உள்ளது. சாட்சியாக அழைக்கின்றனரா அல்லது சந்தேகத்தின்படி அழைக்கின்றனரா என்பதை தெரிவிக்கவில்லை.
எனவே, எங்களுக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்ய வேண்டும்; அதுவரை, அமலாக்கத் துறை வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு கோரிய மனுக்கள், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. இரு தரப்பு வாதங்களுக்கு பின், அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை செயல்படுத்த, இடைக்காலத் தடை விதித்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.