'கண்மாய்களில் மேம்பாலம் ரோடு பணிக்கு தடை': உயர்நீதிமன்றம் உத்தரவு
'கண்மாய்களில் மேம்பாலம் ரோடு பணிக்கு தடை': உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜன 30, 2024 07:31 AM

மதுரை : மதுரை வண்டியூர் கண்மாயில் மேம்பால பணி, தென்கால் கண்மாயில் சாலைப்பணிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது.
மதுரை வழக்கறிஞர் மணிபாரதி தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்டிலிருந்து கோமதிபுரம் வரை 2.1 கிலோ மீ., துாரம் ரூ.150.28 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணியை தமிழக நெடுஞ்சாலைத்துறை துவங்கியது. இதற்காக வண்டியூர் கண்மாயை சேதப்படுத்தியுள்ளனர். இதனால் கண்மாயில் தண்ணீர் தேக்க இயலாத நிலை ஏற்படும்.
திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் கரையில் சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இதற்கும் வண்டியூர் கண்மாயில் மேம்பாலம் கட்டுமான பணிக்கும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு ஏற்கனவே விசாரித்தது.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்: மதுரை 50 ஆண்டுகளில் பல நீர்நிலைகளை இழந்துள்ளது. இரு கண்மாயிலும் மேற்கொள்ளப்படும் பணிக்கு இடைக்கால தடை விதிக்கிறேன்.
நீதிபதி பி.புகழேந்தி: மதுரை- திருமங்கலம் இடையே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தென்கால் கண்மாய்க்கரை வழியாக புதிய இருவழிச்↔தொடர்ச்சி ௪ம் பக்கம்சாலை அமைக்கப்படுகிறது. வண்டியூர் கண்மாயில் தடுப்புச் சுவர்களை உயர்த்தி, தடுப்பணை பலப்படுத்தப்படுகிறது. கண்மாயில் நீரை சேமிப்பது பாதிக்கப்படாது. இடைக்கால தடை உத்தரவு வழங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. இவ்வாறு உத்தரவிட்டனர்.
இருவரும் மாறுபட்ட நிலைப்பாடு எடுத்ததால் தலைமை நீதிபதியின் உத்தரவுப்படி மூன்றாவது நீதிபதி எம்.தண்டபாணி முன்னிலையில் ஏற்கனவே விசாரணைக்கு வந்தது. அவர் இரு கண்மாய்களிலும் பணியை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி, எம்.தண்டபாணி ஆகியோர் இரு கண்மாய்களிலும் ஜன.,22 ல் ஆய்வு செய்தனர்.
ஜன.,23 ல் நீதிபதி எம்.தண்டபாணி,''ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவு தொடரும்,'' எனக்கூறி ஒத்திவைத்தார். நேற்று நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார்.
அரசு தரப்பு: கண்மாய்களில் நீர் தேக்குவது பாதுகாக்கப்படும். எவ்வித மாற்றமும் செய்யப்படாது. நீர்வரத்து, நீர் வெளியேறும் வழித்தடம் பாதிக்கப்படாது. கரைகள் பலப்படுத்தப்படும்.
நீதிபதி: கண்மாய்களை சேதப்படுத்தியுள்ளீர்கள்.
அரசு தரப்பு: இவ்வழக்கு முடிவுக்கு வரும்வரை இரு கண்மாய்களிலும் பணி நிறுத்தி வைக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதி: நான் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில் உடன்படுகிறேன். அரசு தரப்பு அளித்த உத்தரவாதத்தின்படி இரு கண்மாய்களிலும் எவ்வித பணியும் மேற்கொள்ளக்கூடாது. இவ்வழக்கு ஏற்கனவே விசாரித்த இரு நீதிபதிகள் அமர்விற்கே மாற்றப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.