ADDED : பிப் 05, 2026 07:02 AM

சென்னை: கமல் புகைப்படம், பெயரை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த, 'நீயே விடை' என்ற நிறுவனத்துக்கு எதிராக, ம.நீ.ம., தலைவரும் எம்.பி.,யுமான கமல், சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
மனுவில், தன் புகைப்படம், பெயர், தன் பிரபல வசனங்கள் ஆகியவற்றை அனுமதியின்றி பயன்படுத்தி, 'டி-சர்ட்'கள், சட்டைகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் கூறியிருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வர்த்தக ரீதியில் கமல் பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆகியோர் ஆஜராகி, 'எதிர் மனுதாரருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ், தவறான முகவரியால் திரும்ப வந்து உள்ளது. அதனால், மின்னஞ்சல் முகவரி வாயிலாக, நோட்டீஸ் அனுப்ப அனுமதிக்க வேண்டும். வழக்கு தொடர்பாக, தமிழ் நாளிதழில் விளம்பரம் செய்துள்ளோம்' என்றனர்.
இதையடுத்து நீதிபதி, எதிர் மனுதாரருக்கு மின்னஞ்சல் வாயிலாக நோட்டீஸ் அனுப்ப, கமல் தரப்புக்கு அனுமதி அளித்தார். கமல் தரப்பு விரும்பும்பட்சத்தில், மனு குறித்து செய்தித்தாள்களில் இன்னும் விரிவாக விளம்பரம் செய்ய அறிவுறுத்தினார். தடையுத்தரவை, வரும் 25 வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

