அடிப்படை பணியிடங்கள் காலி; பத்திரப்பதிவு துறையில் அவதி
அடிப்படை பணியிடங்கள் காலி; பத்திரப்பதிவு துறையில் அவதி
ADDED : ஜன 17, 2024 03:09 AM

சென்னை : பதிவுத் துறையில் எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவு காவலர்களுக்கான, 90 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளதாக புகார் எழுந்து உள்ளது.
தமிழகத்தில், 575 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. ஒரு சார் - பதிவாளர் அலுவலகத்துக்கு, ஒரு எழுத்தர், 2 அலுவலக உதவியாளர், ஒரு இரவு காவலர் இருக்க வேண்டும்.
வேலை வாய்ப்புஅலுவலகங்களில் இருந்து பதிவுமூப்பு அடிப்படையில் பட்டியல் பெற்று, அந்தந்த மாவட்ட அலுவலர்களே, இப்பணியிடங்களை நிரப்பலாம்.
கடந்த சில ஆண்டுகளாக, இப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால், சார் - பதிவாளர் அலுவலக பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து, பதிவுத் துறை அலுவலர் சங்க நிர்வாகிகள், பதிவுத் துறை தலைவரிடம் அளித்துள்ள மனு:
தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் என, 575 சார் - பதிவாளர் அலுவலகங்களில், 2,300 பணியிடங்கள் உள்ளன. இதில், 90 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன.
பல இடங்களில், உதவியாளரே இரவு காவலராகவும் பணியில் இருக்கும் சூழல் நிலவுகிறது. முறையான இரவு காவலர்கள் இல்லாததால், அலுவலகம் மற்றும் ஆவணங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த தடை சட்டம் வந்தபோது, புதிதாக இதுபோன்ற பணியிடங்களை நிரப்ப தடை விதிக்கப்பட்டது. பின், பதிவுத் துறைக்கு இந்த தடையில் விலக்கு அளிக்கப்பட்டது. எனவே, இப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பதிவுத் துறை அதிகாரி ஒருவர்கூறியதாவது:
மாவட்ட வாரியாக காலியிட விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன், பணியிடங்களை நிரப்ப, மாவட்ட அலுவலர்கள் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

