ADDED : மார் 25, 2025 05:01 AM

சென்னை : சென்னை ஐ.ஐ.டி., யில், மின்சார வாகனங்களுக்கான, கார்பன் உமிழ்வில்லாத ேபட்டரிகளை உருவாக்கும் ஆய்வு மையம் திறக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க, அதற்கான தொழில்நுட்பத்தை நாட்டிலேயே கண்டறிய, பல்வேறு ஆராய்ச்சிகள் நடக்கின்றன.
இதன் ஒரு பகுதியாக, சென்னை ஐ.ஐ.டி.,யில், 'ஜீரோ இ - எமிஷன்' செயல் திட்டத்தை உருவாக்க, கார்பன் உமிழ்வில்லாத பேட்டரிகள் தயாரிக்க ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.
இதை, மத்திய கனரக தொழில் துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் ஹனிப் குரேஷி, முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்தின் விஞ்ஞானி பிரீத்தி பன்சால், மத்திய ஆட்டோ மொபைல் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாக இயக்குனர் பானர்ஜி ஆகியோர் திறந்து வைத்தனர்.
ஆய்வகத்தில், பேட்டரி தொழில்நுட்ப மேம்பாடு, பேட்டரி செயல்திறன் பகுப்பாய்வு, எக்ஸ்ட்ரீம் பாஸ்ட் சார்ஜிங் தீர்வுகள், வயர்லெஸ் சார்ஜிங் சிஸ்டம்ஸ் போன்ற தொழில்நுட்பங்களை, ஆய்வு செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
இங்கு, மின்சார வாகன போக்குவரத்து குறித்து, 100 மணி நேரம் இணைய வழியில் கற்பிக்கவும், மேலும், தொழில்நுட்ப நிபுணத்துவம் பெற விரும்புவோருக்கு, எம்.டெக்., படிப்பை துவக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி, டீன் மனு சந்தானம், வடிவமைப்பு துறைத் தலைவர் சங்கர்ராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.