ADDED : ஜூலை 13, 2011 11:08 PM
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே, பாரதிநகர் குடியிருப்பில், நள்ளிரவில் வீட்டுக்கதவை தட்டும் கரடிகளால், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையோர கிராமங்களில், ஏற்கனவே காட்டு யானைகளின் தொல்லை அதிகமாக உள்ளது.
இவற்றை தடுக்க, வனத் துறையினர் எடுத்த முயற்சிகளுக்கு, போதுமான பலன் இல்லை. இந்நிலையில், புதியதாக முளைத்துள்ள கரடித் தொல்லை, பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், கூடலூர் பேரூராட்சிக்கு உட்பட்டது பாரதிநகர். மலை அடிவாரத்தில் உள்ள இக்குடியிருப்புக்குச் செல்ல, போதுமான சாலை, தெருவிளக்கு வசதி இல்லை. சில மாதங்களுக்கு முன் நுழைந்த மலைப்பாம்பு பிடிக்கப்பட்டு, வனத்துக்குள் விடப்பட்டது. கடந்த சில நாட்களாக, கரடிகள், பாரதி நகருக்குள் நுழைய ஆரம்பித்துள்ளன.
பொதுமக்கள் கூறியதாவது: நள்ளிரவில் வீட்டுமுன் நின்று, பலத்த ஓசை எழுப்பும் கரடிகள், வீட்டுக்கதவை நகங்களால் பிராண்டுகின்றன. 'கொழுகொழு'வென காணப்படும் இவைகளை விரட்ட பயமாக உள்ளதால், விடிய, விடிய உயிர் பயத்துடன் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்க வேண்டியுள்ளது.
தினமும் மாலை 7.00 மணிக்கு மலையடிவாரத்துக்கு வரும் ஆண், பெண் கரடிகள், இங்குள்ள பாறை மீது அமர்ந்து, பலமாக கத்தி ஓசை எழுப்புகின்றன. பின், குடியிருப்பு பகுதிக்குள் நுழைகின்றன. இவற்றை தடுக்க, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

