அரசு மருத்துவமனையில் ரகளை டாக்டர்கள், ஊழியர்களுக்கு அடி
அரசு மருத்துவமனையில் ரகளை டாக்டர்கள், ஊழியர்களுக்கு அடி
ADDED : ஜன 15, 2024 02:20 AM
நாகப்பட்டினம்: நாகை, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, அவசர சிகிச்சை பிரிவில், டாக்டர்கள் சிகிச்சையளித்து கொண்டிருந்த போதே, இரு தரப்பினர் சரமாரியாக மோதிக்கொண்டனர். இதில், டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கும் அடி விழுந்ததால், மருத்துவமனை ஊழியர்கள் அச்சமடைந்தனர்.
நாகை, செல்லுாரை சேர்ந்தவர் காஸ்ட்ரோ, 26. நாகை, மாங்கொட்டை சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சஞ்சய், 26. இருவருக்கும் அண்ணா சிலை அருகே தகராறு ஏற்பட்டது.
காயமடைந்த இருவரும், நேற்று முன்தினம் இரவு நாகை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர்.
இருவருக்கும் மருத்துவ ஊழியர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு கும்பலாக இருந்த இரு தரப்பை சேர்ந்தவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி, கைகலப்பாக மாறியது; இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கும் அடி விழுந்தது. இதனால் அவசர சிகிச்சை பிரிவு போர்க்களமாக காட்சியளித்தது.
டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், இரு தரப்பையும் விரட்டியடித்தனர். அதிர்ச்சியடைந்த மருத்துவ ஊழியர்கள், 'பணியின் போது பாதுகாப்பு வழங்க வேண்டும்; 24 மணி நேரமும் அவசர சிகிச்சை பிரிவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்' என, கோரிக்கை விடுத்தனர்.