UPDATED : ஜன 12, 2024 03:23 PM
ADDED : ஜன 12, 2024 12:42 AM

உலக, தேசிய, தமிழக நடப்புகள் குறித்து தினமலர் நாளிதழுக்கு வாசகர்கள் எழுதிய கடிதம்
எஸ்.செபஸ்டின், சிவகாசி, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
நம் நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்று, 76 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனாலும், பட்டியலின மக்கள் ஜாதி துவேஷத்திலிருந்து இன்று வரை விடுதலை பெறவில்லை. இன்னும்பல கிராமங்களில் இரட்டை டம்ளர் முறையும், கோவில்களுக்குள் பிரவேசிக்க முடியாத நிலையும் உள்ளது.
இந்நிலை ஒழிய, அவர்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் முன்னேற வேண்டும். அதற்காகவே மத்திய, மாநில அரசுகள் பலவிதமான சலுகைகளை கொடுக்கின்றன.
ஆனால், அந்த சலுகைகளை பெற்று தொழில் செய்து முன்னேற, அவர்களுக்கு உரிய வழிகாட்டிகள் இல்லை. அரசின் சலுகைகள் பற்றிய விபரமும் அனைத்து பட்டியலின மக்களுக்கும் சென்றடைவதில்லை.
இதனால் தான், 5,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினாலும் பயன்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்படுகிறது. பட்டியலினத்தவர்கள் தொழில் செய்ய வங்கிகளில், 1 லட்சம் ரூபாய் கடன் பெற்றால், அதில், 35,000 ரூபாய் மானியமாக அதாவது இலவசமாக தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் கொடுக்கிறது.
மேலும், வங்கி கொடுக்கும் கடனுக்கு உரிய வட்டியில் குறிப்பிட்ட தொகையையும், தொழில் முதலீட்டு கழகம் செலுத்துகிறது. இது தெரியாமல், பட்டியலின பட்டதாரி இளைஞர்கள் ஊர், ஊராக வேலை தேடி அலைகின்றனர்.
இவர்களின் ஓட்டுகளை பெற்று ஆதாயம் அடையும் ஜாதிக் கட்சிகளின் தலைவர்கள், இது தெரிந்தும், பட்டியலின மக்கள் முன்னேற வேண்டும் என எண்ணுவதில்லை.
அவர்கள் முன்னேறி விட்டால், தங்கள் கட்சிக்கு கொடி பிடிக்கவும், கோஷம் போடவும் ஆள் இல்லாமல் போய் விடும் என கருதி, சலுகைகளை தெரிவிப்பதில்லை. இவர்களின் ஓட்டுகளை வைத்து, பெரிய கட்சிகளிடம் கோடிக்கணக்கில் பேரம் பேசி, சில சீட்களை பெற்று ஜெயித்து வசதியாக வாழ்கின்றனர்.
எனவே, தீண்டாமை கொடுமைகள் ஒழிவது, பட்டியலின இளைஞர்கள் கையில்தான் உள்ளது. அவர்கள் ஒவ்வொருவரும் அரசு சலுகைகளை பெற்று தொழில் முனைவோராக மாற வேண்டும். மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும்.

