குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்களுக்கு துரோகம்; அரசு மீது சீமான் குற்றச்சாட்டு
குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்களுக்கு துரோகம்; அரசு மீது சீமான் குற்றச்சாட்டு
ADDED : டிச 09, 2024 10:00 AM

சென்னை: குடிநீர் வடிகால் வாரிய ஆய்வகத்தில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை தமிழக அரசு பணி நிலைப்படுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழக குடிநீர் வடிகால் வாரியத்தில் இயங்கி வரும் 113 நீர் பரிசோதனை ஆய்வுக்கூடங்களில் கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரியும் 828 பணியாளர்களைப் பணி நிலைப்படுத்தாமல் காலம் கடத்திவரும் தமிழக அரசின் கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. மக்களின் நலன் காக்கும் நல்ல குடிநீர் வழங்குவதற்கான பணிகளைச் செய்யும் தொழிலாளர்கள், அடிப்படை உரிமைகள் கேட்டு பத்தாண்டுகளாக வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளியிருப்பது மிகுந்த மன வேதனையளிக்கிறது.
தமிழக குடிநீர் வடிகால் வாரியத் தொழிலாளர்கள் கடந்த 15 ஆண்டுகளாகப் பணியாற்றியும், தமிழக அரசு அவர்களை இதுவரை பணி நிலைப்படுத்தாமலும், உரிய ஊதியம் வழங்காமலும் அவர்களின் உழைப்பை உறிஞ்சி வருவது ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும். தங்களின் அடிப்படை உரிமைகளுக்காக குடிநீர் வடிகால் ஆய்வக ஊழியர்கள் பல்வேறு அறப்போராட்டங்களை முன்னெடுத்த பிறகும், அதனை நிறைவேற்ற மறுப்பது, தி.மு.க., அரசு குடிநீர் வடிகால் ஆய்வகத் தொழிலாளர்களுக்குச் செய்கின்ற பச்சைத் துரோகமாகும்.
ஆகவே, தமிழக அரசு உடனடியாக குடிநீர் வடிகால் வாரிய ஆய்வகத்தில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களைப் பணி நிலைப்படுத்துவதோடு, உரிய ஊதியம் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.