ADDED : மே 22, 2024 05:26 PM

சென்னை: தமிழக பா.ஜ., அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்த, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகைக்கு, ‛‛திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்குச் செய்த துரோகங்கள் குறித்த புத்தகமும் பரிசாக வழங்கலாம்'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக பா.ஜ., தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகை அறிவித்துள்ளதாக அறிந்தேன். எங்கள் அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும், உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும்.
துரோகங்கள்
வரும் அனைவருக்கும், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்குச் செய்த துரோகங்கள் குறித்த புத்தகமும் பரிசாக வழங்கலாம் என்று இருக்கிறோம். எப்படி திமுகவும் காங்கிரசும் தமிழினத்துக்கே எதிரியாக விளங்குகின்றன என்ற காணொளியையும், அன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றவும் முடிவு செய்துள்ளோம். காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர், எங்கள் மாநிலத் தலைமை அலுவலகம் வரவிருக்கும் தேதியை மட்டும், முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

