UPDATED : ஆக 18, 2024 06:05 PM
ADDED : ஆக 18, 2024 06:00 PM

பவானிசாகர் : மூன்று மாவட்ட விவசாயிகளின் உயிர் நாடியாக விளங்கும், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை, 70வது ஆண்டில் நாளை (ஆக.,19) அடியெடுத்து வைக்கிறது.
தமிழகத்தில் தஞ்சை டெல்டா பாசனத்துக்கு அடுத்து மிகப்பெரிய பாசனப்பரப்பு, தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையை பெற்றது பவானிசாகர் அணை. ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில், 2.47 லட்சம் ஏக்கர் நிலங்கள் அணை மூலம் பாசனம் பெறுகின்றன. அணை கரையின் நீளம், 8.78 கி.மீ., கீழ்பவானி பிரதான கால்வாயின் நீளம், 200 கி.மீ., பிரதான கால்வாயிலிருந்து, 800 கி.மீ., நீளத்துக்கு கிளை வாய்க்கால், 1,900 கி.மீ., நீளத்துக்கு பகிர்மான வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரம், 105 அடி.
இங்கிலாந்து இயந்திரங்கள்
பவானி ஆறு, மாயாறு சேருமிடத்தில், 10.50 கோடி ரூபாய் மதிப்பில், பவானிசாகர் அணை கட்டும் பணி, 1948ல் தொடங்கப்பட்டது. தொழில் நுட்ப இயந்திரங்கள், இங்கிலாந்து நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டன. ஏழாண்டுகள் நடந்த பணி முடிந்து, 1955 ஆக.,19ல் அப்போதைய சென்னை மாகாண முதல்வர் காமராஜர், அணையை திறந்து வைத்தார்.
16 மெகாவாட் மின்னுற்பத்தி
அணையில் ஆற்று மதகுகள் ஒன்பது, கீழ்பவானி வாய்க்கால் மதகுகள் மூன்று, உபரி நீர் 'ஸ்பில்-வே' மதகுகள் ஒன்பது என, 21 மதகுகள் உள்ளன. இதில் பவானி ஆற்று மதகுகளில் வெளியேற்றப்படும் நீரில், 8 மெகாவாட் மின்சாரம், கீழ்பவானி வாய்க்காலில், 8 மெகாவாட் மின்சாரம் என, 16 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதுவரை 22 முறை 'புல்'
பவானிசாகர் அணை, 1955ல் திறக்கப்பட்ட நிலையில், 1957ல் முதல் முறையாக, முழு கொள்ளளவை எட்டியது. அதன்பின், 1958, 59, 60, 61, 62 என, தொடர்ச்சியாக ஆறு முறை நிரம்பியது. பின், 2005, 2006, 2007ல் முழு கொள்ளளவை எட்டியது. இதன் பின், 2018 முதல் 2022 வரை ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக அணைை நிரம்பியது. இறுதியாக, 2022 ஆக.,5ம் தேதி அணை நீர்மட்டம், 102 அடியை தொட்டது. அதன் பிறகு அணை நிரம்பவில்லை. மொத்தத்தில் அணை கட்டப்பட்ட, 70 ஆண்டுகளில், 22 முறை அணை நிரம்பியுள்ளது.