போலி மதச்சார்பின்மை பேசி மக்கள் வழிபாட்டு உரிமைகளை பறிக்கும் திமுக; அண்ணாமலை
போலி மதச்சார்பின்மை பேசி மக்கள் வழிபாட்டு உரிமைகளை பறிக்கும் திமுக; அண்ணாமலை
UPDATED : ஜன 07, 2026 05:14 PM
ADDED : ஜன 07, 2026 04:29 PM

சென்னை: போலி மதச்சார்பின்மை பேசி, தொடர்ந்து மக்களின் வழிபாட்டு உரிமைகளை பறித்துக் கொண்டிருக்கும் திமுக, அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்திக் கொள்வது நல்லது என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை;
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர், ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள செல்வ முத்துக்குமரன் திருக்கோவில் அப்பகுதி மக்களின் குலதெய்வ வழிபாட்டிற்கான பழமையான கோவிலாகும். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அலகுமலை முருகன் கோவிலுடன் தொடர்புடைய கோவில் இது.
இந்த நிலையில், நேற்று , திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்குப் பழி வாங்குவதற்காக, இன்று இந்த பழமையான திருக்கோவிலை, காவல்துறையைக் குவித்து திமுக அரசு முற்றிலுமாக இடித்திருக்கிறது. திமுக அரசின் இந்த ஹிந்து மத விரோத, தரங்கெட்ட நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
திமுக நிர்வாகிகள் ஆக்கிரமித்து வைத்திருக்கும் ஹிந்து கோவில்களுக்குச் சொந்தமான இடங்களை மீட்க வக்கற்ற திமுக அரசு, பொதுமக்கள், தலைமுறை, தலைமுறையாக வழிபட்டு வரும் பழமையான கோவில்களை தொடர்ந்து இடித்துக் கொண்டிருக்கிறது. யாரை திருப்திப்படுத்த இது போன்ற ஹிந்து மத விரோத செயல்பாடுகளை நடத்துகிறது திமுக?
செல்வ முத்துக்குமரன் கோவிலை இடிப்பதை எதிர்த்துப் போராட்டம் நடத்திய, ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மீது, காவல்துறை நடத்திய பலப்பிரயோகம் காரணமாக காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி பக்தர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
போலி மதச்சார்பின்மை பேசி, தொடர்ந்து தமிழக மக்களின் வழிபாட்டு உரிமைகளை பறித்துக் கொண்டிருக்கும் திமுக, தனது அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்திக் கொள்வது நல்லது. பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.
இவ்வாறு அண்ணாமலை அறிக்கையில் கூறி உள்ளார்.

