மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை என ஏமாற்றும் முதல்வர்; அண்ணாமலை குற்றச்சாட்டு
மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை என ஏமாற்றும் முதல்வர்; அண்ணாமலை குற்றச்சாட்டு
ADDED : ஜன 17, 2026 03:48 PM

சென்னை: மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை கொடுக்கப் போகிறோம் என்று மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார் என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை;
கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில், ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போருக்கு ஊக்கத் தொகையாக, மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின். ஆகா, தமிழ்ப் பண்பாட்டை ஊக்குவிக்கப் போகிறார் என்று அனைவரும் நினைத்தோம். ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. இதுவரை, ஒரு ரூபாய் கூடக் கொடுக்கவில்லை.
இந்த நிலையில் இன்று, மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை கொடுக்கப் போகிறோம் என்று மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
ஏற்கனவே, ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பவர்கள் ஒவ்வொருவருக்கும், இந்த ஐந்து ஆண்டுகளில், கொடுக்கப்பட வேண்டிய சுமார் ரூ. 60,000 ஊக்கத்தொகை எப்போது வருமென்று தெரியவில்லை. இப்படி தொடர்ந்து வெற்று வாக்குறுதிகள் கொடுத்து யாரை ஏமாற்றலாம் என்று முதல்வர் எண்ணிக் கொண்டிருக்கிறார் என்பது தெரியவில்லை.'
முதல்வருக்கு பிடித்த 'பேரு பெத்த பேரு, தாக நீலு லேது' என்ற தெலுங்குப் பழமொழி, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளுக்கு முழுமையாகப் பொருந்தும்.
இவ்வாறு அண்ணாமலை அறிக்கையில் கூறி உள்ளார்.

