அப்போ, பல லட்சம் இளைஞர்கள் நிலைமை? டி.என்.பி.எஸ்.சி., மீது அண்ணாமலை பாய்ச்சல்
அப்போ, பல லட்சம் இளைஞர்கள் நிலைமை? டி.என்.பி.எஸ்.சி., மீது அண்ணாமலை பாய்ச்சல்
ADDED : டிச 14, 2024 08:04 PM

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. நடத்திய அரசு உதவி வக்கீல் பணிக்கான முதல் நிலை தேர்வில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதால், மறுதேர்வு நடத்த வேண்டும் என்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு உதவி வக்கீல் பணியில், காலியாக உள்ள 51 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக, தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நடத்தும், முதல் நிலை தேர்வு இன்று பிற்பகல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தேர்வுக்கு, 4,000க்கும் மேல் எண்ணிக்கையில் வக்கீல்கள் விண்ணப்பித்திருந்தனர்.
இந்த நிலையில், தேர்வுகள் நடந்த பல மையங்களில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வக்கீல்கள் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டதாகவும், முறைப்படி விண்ணப்பித்த பல வக்கீல்களின் பெயர்கள், தேர்வு மையங்களில் விடுபட்டிருப்பதாகவும் தெரிகிறது. தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம், 4,000 வக்கீல்களுக்கான தேர்வு ஏற்பாடுகளையே முறையாக மேற்கொள்ளவில்லை என்றால், தேர்வாணையம் நடத்தும் இதர தேர்வுகளை நம்பி அரசுப் பணிக்கான தேர்வுகள் எழுதக் காத்திருக்கும் பல லட்சம் இளைஞர்கள் நிலை என்ன?
அரசுப் பணிக்கான தேர்வுகளை இத்தனை அலட்சியப் போக்கில் கையாளும் தி.மு.க., அரசினை வன்மையாகக் கண்டிக்கிறேன். உடனடியாக, இன்று நடைபெற்ற தேர்வைக் கைவிட்டு, மீண்டும் வெகுவிரைவில் முறையான மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.