பொய்யின்றி வேறென்ன? முதல்வர் ஸ்டாலினை கேட்கிறார் அண்ணாமலை
பொய்யின்றி வேறென்ன? முதல்வர் ஸ்டாலினை கேட்கிறார் அண்ணாமலை
ADDED : ஜன 28, 2026 10:45 AM

சென்னை: தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பானது என்று கூறிய முதல்வர் ஸ்டாலின் பச்சைப் பொய் பேசுவதாக பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக, திமுக போன்ற கட்சிகள் முன்கூட்டியே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், முதல்வர் ஸ்டாலின், திமுக அரசின் பெருமைகளை எடுத்துக் கூறி வருகிறார். அண்மையில் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், 'இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு மிக்க மாநிலம் தமிழகம் தான். தலைநிமிர்ந்து சொல்வேன்,' என்று கூறியிருந்தார்.
அவரது இந்தப் பேச்சு பொய் என்று கூறி, பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அந்தப் பதிவில், அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை சம்பவத்தில் திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டது உள்பட பெண்களுக்கு எதிரான குற்றங்களில் திமுகவினர் கைதான சம்பவங்களை குறிப்பிடும் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், இத்தனை பாலியல் குற்றங்களில் திமுக நிர்வாகிகள் பிடிபட்ட பின்னரும், தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறுவது பொய்யன்றி வேறென்ன?, என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

