ADDED : டிச 22, 2024 02:06 AM
சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை:
கடந்த, 2024 டிச., 16ல் வேலுார் மாவட்ட பா.ஜ., ஆன்மிக பிரிவு மாவட்ட நிர்வாகி விட்டல் குமார், தி.மு.க., ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையில், வேலுார் கே.வி.குப்பம் மேற்கு ஒன்றியம், நாகல் ஊராட்சி தலைவரான பாலாசேட்டு என்ற நபருக்கு தொடர்பு இருப்பது தெரிந்து, குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர்.
அதை கண்டுகொள்ளாமல் இருந்தது காவல் துறை. நேற்று பா.ஜ., தொடர்ந்து வலியுறுத்திய பின், ஊராட்சி தலைவர் பாலாசேட்டு, அவரது மகனை இன்று கைது செய்துள்ளது.
ஒவ்வொரு முறை தி.மு.க.,வினர் குற்றம் செய்யும் போதும், காவல் துறை நடவடிக்கை எடுக்க, பா.ஜ., தொடர்ந்து வலியுறுத்த வேண்டியுள்ளது.
பா.ஜ.,வினர் உயிருக்கு ஆபத்து நிலவும் நிலையில், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், தி.மு.க.,வின் ஒரு பிரிவை போல் காவல் துறை செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில், தினமும் ஒன்றுக்கும் மேற்பட்ட கொலைகள் நடக்கின்றன. காவல் துறையின் பணி, சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுவதே தவிர, தி.மு.க.,வினர் அராஜகத்துக்கு துணை போவதல்ல.
ஆளுங்கட்சி அடுத்த தேர்தலில் மாறும். ஆனால், காவல் துறையின் கடமை மாற போவதில்லை. இதை உணர்ந்து செயல்படுவது நல்லது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.