ADDED : ஜன 11, 2025 11:57 PM

சென்னை:'புதிய ரயில் பாதையை ரத்து செய்த, தி.மு.க., அரசின் முடிவுக்கு எதிராக, அருப்புக்கோட்டையில் வரும், 20ம் தேதி போராட்டம் நடத்தப்படும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை:
பிரதமர் மோடி, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி, நாட்டை வளர்ச்சி பாதையில் முன்னோக்கி கொண்டு செல்கிறார். தி.மு.க., அரசு, தமிழகத்தை பின்னோக்கி இழுத்து செல்கிறது.
மதுரை --- துாத்துக்குடி இடையே அருப்புக்கோட்டை வழியாக, புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம், தி.மு.க., அரசின் எதிர்ப்பால் கைவிடப்பட்டு உள்ளதை, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெளிவுபடுத்தியுள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு தேவையான, 8,300 ஏக்கர் நிலத்தில், 26 சதவீதம் மட்டுமே, தி.மு.க., அரசால் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. இதை, ரயில்வே அமைச்சர் சமீபத்தில் கூறியிருந்தார்.
அருப்புக்கோட்டை வழியாக செல்லும் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் பாதைக்கு, 2,130 ஏக்கர் நிலத்தை மட்டுமே கையகப்படுத்தி உள்ளது.
தி.மு.க., அரசின் நத்தை வேக செயல்பாடு, தற்போது, அருப்புக்கோட்டை மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் தடையாக மாறியுள்ளது.
தி.மு.க., அரசின் இந்த மக்கள் விரோத அணுகுமுறையை, தமிழக பா.ஜ., சார்பில் கண்டிக்கிறோம். வரும், 20ம் தேதி அருப்புக்கோட்டை நகரில், புதிய ரயில் பாதையை ரத்து செய்த தி.மு.க., அரசின் முடிவுக்கு எதிராக, விருதுநகர் மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

