செந்தில் பாலாஜி மிரட்டலுக்கு பா.ஜ., பயப்படாது: அண்ணாமலை
செந்தில் பாலாஜி மிரட்டலுக்கு பா.ஜ., பயப்படாது: அண்ணாமலை
ADDED : டிச 08, 2024 03:05 AM
சென்னை:'மக்கள் நலன் சார்ந்த கேள்விக்கு பதில் அளிக்க வேண்டியது தி.மு.க., அரசின் கடமை. அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டலுக்கு பா.ஜ., ஒருபோதும் பயப்படாது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க., அரசின் தவறுகளை கேள்வி கேட்பவர்களை, 'வழக்கு தொடருவோம்' என்று பூச்சாண்டி காட்டி மிரட்டும் தொனியில், மின் வாரியம், அதானி நிறுவனத்துக்கு செலுத்திய தொகை குறித்த கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
ஒரு வகையில், அதானி நிறுவனத்துக்கு எந்த கட்டணமும் செலுத்தவில்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முற்சிக்காமல், மின் வாரியத்துடனான வழக்கு காரணமாக, 2016ல் இருந்து அந்நிறுவனத்துக்கு வழங்கப்படாமல் இருந்த கட்டணத்தை, தி.மு.க., ஆட்சியில் வழங்கியுள்ளதை, அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார். அதை பாராட்டியே தீர வேண்டும்.
அதானி நிறுவனத்துடன் தி.மு.க., அரசு எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என்று, திரும்ப திரும்ப கூறும் செந்தில் பாலாஜி, தன் வார்த்தை விளையாட்டின் வாயிலாக, அதானி நிறுவனத்துடனான ஒப்பந்தங்கள் தொடர்வதை மறைக்க முயற்சிக்கிறார். ஆனால், அவரது முயற்சிகள் பலிக்கவில்லை.
அதானி நிறுவனத்திடம், யூனிட் 7.01 ரூபாய் விலையிலேயே மின் வாரியம் தொடர்ந்து மின்சாரம் வாங்குவதையும், அதற்காக கடந்த நிதியாண்டில், 99 கோடி ரூபாய் கூடுதல் கட்டணம் பெற்றிருப்பதையும், அந்நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
அப்படி இருக்கையில், எந்த அடிப்படையில் யூனிட் 5.10 ரூபாய்க்கு தி.மு.க., ஆட்சியில் கொள்முதல் செய்வதாக குறிப்பிடுகிறார்.
மத்திய அரசிடம் மட்டுமே, சூரியசக்தி மின்சாரத்திற்கு யூனிட், 2.61 ரூபாய் என்ற விலையில் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், வேறு தனியார் நிறுவனங்களிடம் தி.மு.க., அரசு எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என்றும் கூறுகிறார்.
ஆனால் நடுத்தர, நீண்டகால ஒப்பந்தங்கள் அடிப்படையில், யூனிட் 3.45 ரூபாய் முதல் 5.31 ரூபாய் வரை தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த தனியார் நிறுவனங்களில், அதானி நிறுவனம் உள்ளதா, இல்லையா.
அரசின் தவறுகளுக்கு மக்களின் வரிப் பணத்தை செலவிடும்போது, மக்கள் நலன் சார்ந்த கேள்வி எழத்தான் செய்யும். அதற்கு பதில் அளிப்பது அரசின் கடமை. அதை விடுத்து வழக்கு தொடருவோம் என்ற உருட்டல், மிரட்டல் எல்லாம், எந்த தவறையோ மறைக்க நடக்கும் முயற்சியாக தான் எடுத்து கொள்ள முடியும்.
இதற்கு எல்லாம் பா.ஜ., பணிந்து செல்லாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.