பாஜ அதிக சீட் கேட்டு, அதிமுகவுக்கு நெருக்கடி தராது; நயினார் நாகேந்திரன் பேட்டி
பாஜ அதிக சீட் கேட்டு, அதிமுகவுக்கு நெருக்கடி தராது; நயினார் நாகேந்திரன் பேட்டி
ADDED : ஜன 08, 2026 10:23 PM

புதுக்கோட்டை: பாஜ அதிக சீட் கேட்டு, அதிமுகவுக்கு நெருக்கடி தர மாட்டோம். எங்களுக்கான தொகுதிகளை மட்டுமே கேட்போம் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து உள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், கல்லாலங்குடியில் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ்-ஐ சந்திக்க உள்ளேன். ஏற்கனவே, அதிமுக - பாஜ கூட்டணிக்கு பாமக வந்துள்ளது. முதல் கட்டமாக அன்புமணி வந்துள்ளார். தொடர்ந்து இன்னும் நிறைய கட்சிகள் வர உள்ளன.
கூட்டணி அடுத்து எப்படி எடுத்துச் செல்வது என்பது குறித்து, இபிஎஸ் இடம் பேசுவேன். அதன்படி தொடர்ந்து செயல்படுவோம். பாஜ அதிக சீட் கேட்டு, அதிமுகவுக்கு நெருக்கடி தர மாட்டோம். எங்களுக்கான தொகுதிகளை மட்டுமே கேட்போம். எங்கள் கூட்டணியில் இருப்போர் அனைவரும் சுதந்திரமாக செயல்படுவோம்.
எங்களுக்கு தொகுதி எத்தனை என்பது இப்போதைக்கு முக்கியமல்ல. யார் முதல்வராக இருக்கக் கூடாது என்பதே முக்கியம். இதற்கு முன்பு நிறைய படங்களுக்கு தணிக்கைச் சான்று கிடைக்காமல் காலதாமதம் ஆகி உள்ளது. அதற்காக, பிரதமர் மோடியைச் சொல்ல முடியாது. சென்சார் போர்டு ஒன்று இருக்கிறது. அதில் தான் என்னவென்று பார்க்க வேண்டுமே தவிர, எடுத்த உடனே மோடியை குற்றம் சுமத்த முடியாது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

