பா.ஜ., மகளிரணி ஆர்ப்பாட்டம்; ஸ்டாலின் பதவி விலக கோரிக்கை
பா.ஜ., மகளிரணி ஆர்ப்பாட்டம்; ஸ்டாலின் பதவி விலக கோரிக்கை
ADDED : நவ 07, 2025 07:17 AM

சென்னை: கோவையில், கல்லுாரி மாணவி பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து, தமிழக பா.ஜ., மகளிரணி சார்பில் நேற்று தமிழகம் முழுதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை, துணைத் தலைவர் குஷ்பு உட்பட, 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
பின், தமிழிசை கூறியதாவது:
தமிழகத்தில் ஸ்டாலின் அரசு, பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. கோவை போன்ற பெரு நகரிலேயே, பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. பெண்களை வெளியே அனுப்பிவிட்டு, வீட்டில், வயிற்றில் நெருப்பை கட்டி கொள்ளும் நிலைமை உள்ளது.
பெண்கள் அனைவரும் துப்பாக்கி வைத்துக் கொள்ளும் சூழ்நிலை உள்ளது. இனிமேல் ஒரு பெண் மீது கை வைத்தால், கை இருக்காது. பெண் குழந்தைகளை பெற்று விட்டு, சும்மா இருப்பரா?
மத்திய உள்துறை அமைச்சக தகவலின்படி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளன. இதற்கு காரணம் போதைப்பொருள். பீஹாரில் பூரண மது விலக்கு வந்த பின், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து விட்டன.
பெண்களின் பாதுகாப்பை, முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும்; இல்லையெனில் பதவி விலக வேண்டும். ஒரு பெண்ணுக்கு கூட பாதுகாப்பு தர முடியாவிட்டால், ஆட்சியில் தொடர தார்மீக உரிமை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

