ADDED : டிச 07, 2025 02:17 AM
புதுக்கோட்டை: “பா.ஜ.,வின் மாயாஜால வேலைகள் தமிழகத்தில் எடுபடாது,” என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில், அவர் அளித்த பேட்டி:
திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்து, தமிழகத்தில் பா.ஜ., காலுான்ற முடியாது. இந்தியாவில் உள்ள மற்ற ஹிந்துக்களில் இருந்து தமிழக ஹிந்துக்கள் வேறுபட்டவர்கள். பா.ஜ.,வின் மாயாஜால வேலைகள் தமிழகத்தில் எடுபடாது.
திருப்பரங்குன்றம் விஷயத்தில், நான் என்ன தவறுதலாக சொன்னேன்? தீர்ப்பில் என்ன சொல்லப்பட்டது என்பதை, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை சொல்ல வேண்டும்.
தீர்ப்பை மாற்றி சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அ.தி.மு.க., ஆட்சியில் சொல்லப்பட்ட தீர்ப்பை தான், நாங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளோம்.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு போல ஜோக்கர், வேறு யாரும் இல்லை. தமிழக மக்கள் அ.தி.மு.க.,வினரை நன்கு புரிந்து கொண்டுள்ளனர்.
நாங்கள் சட்டத்தை மதிப்பவர்கள். எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறோம். தமிழர்கள், திருப்பரங்குன்றம் விவகாரத்தில், எது சரி எது தவறு என்பதை உணர்ந்து செயல்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

