ஐகோர்ட்டில் வெடிகுண்டு கைமாற்றம்; ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஷாக் தகவல்
ஐகோர்ட்டில் வெடிகுண்டு கைமாற்றம்; ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஷாக் தகவல்
ADDED : டிச 11, 2024 05:21 PM

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு ஐகோர்ட் வளாகத்திற்குள் கைமாற்றப்பட்டதாக போலீசார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து விசாரித்த போலீசார், பொன்னை பாலு, ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி, தோட்டம் சேகரின் மனைவி மலர்க்கொடி, பிரபல ரவுடி நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 28 பேரை கைது செய்தனர். அதில் ரவுடி திருவேங்கடம் மற்றும் சீசிங் ராஜா போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 28 பேர் மீதும், செம்பியம் காவல்நிலைய போலீசார் 4,832 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை, எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். என்கவுன்டர் செய்யப்பட்டவர்களை தவிர்த்து எஞ்சிய நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளின் விசாரணை ஐகோர்ட்டில் நடைபெற்ற போது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசார் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர். அதாவது, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு ஐகோர்ட் வளாகத்திற்குள் கைமாற்றப்பட்டதாக போலீசார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
இதனைக் கேட்ட நீதிபதிகள், கோர்ட் வளாகத்தில் வெடிகுண்டு எப்படி கொண்டுவரப்பட்டது என்று கேள்வி எழுப்பியதுடன், இது தொடர்பாக தனியாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து மனுக்கள் மீதான விசாரணையையும் ஜன., முதல் வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.