பல கோடி ரூபாய் சொத்துக்காக மதுரையில் தொழிலதிபர் கடத்தல்
பல கோடி ரூபாய் சொத்துக்காக மதுரையில் தொழிலதிபர் கடத்தல்
ADDED : ஏப் 17, 2025 06:46 AM

மதுரை: மதுரையில் பல கோடி ரூபாய் சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்டு, வீடு புகுந்து தொழிலதிபரை கடத்திய வழக்கில், 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் அவர் மீட்கப்படாத நிலையில், முக்கிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை, பீபிகுளத்தைச் சேர்ந்தவர் சுந்தரராமன், 56. மதுரையில் கல்வி நிறுவனங்கள், மில் நடத்தி வரும் பிரபல தொழிலதிபரின் நெருங்கிய உறவினர். பைபாஸ் ரோட்டில், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் விற்கும் தொழில் செய்கிறார். திருமணம் ஆகாதவர். இவருக்கு, குற்றாலம், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் சொத்துக்கள் உள்ளன.
இதற்கிடையே, மதுரையைச் சேர்ந்த சிலர், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுந்தரராமனின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 6 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்தனர். அது தன்னுடைய நிலம் எனக்கூறி, ஆவணங்களுடன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், சுந்தரராமன் வழக்கு தொடர்ந்தார். கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற வளாகத்திலேயே, சுந்தரராமனுக்கு எதிர்தரப்பினர் மிரட்டல் விடுத்தனர்.
இந்நிலையில், இடப்பிரச்னை தொடர்பாக, ஏப்., 14ல் சுந்தரராமன் வீட்டிற்கு சிலர் வந்து பேச்சு நடத்தினர். ஆனால், சுந்தரராமன் ஒப்புக்கொள்ளாததால், அவர்கள் வந்த காரில், அவரை கடத்திச் சென்றனர்.
அங்கிருந்த கடை ஊழியர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தொடர் விசாரணைக்கு பின், கடத்தலுக்கு உதவியதாக, நேற்று முன்தினம், ஐந்து பேரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர். நேற்று, நான்கு பேரை கைது செய்தனர். பெயர், விபரங்களை போலீசார் வெளியிட மறுத்துவிட்டனர். இதற்கிடையே, சுந்தரராமனை மீட்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசாரில் சிலர், வடமாநிலங்களுக்கு சென்றுள்ளனர்.
போலீசார் கூறுகையில், 'விரைவில் சுந்தரராமன் மீட்கப்படுவார். அப்போது தான், அவர் கடத்தப்பட்டதற்கான உண்மையான காரணம், இதில், சம்பந்தப்பட்டிருக்கும் குற்றவாளிகள் குறித்தும் தெரியவரும்' என்றனர்.